காரியம் முடியும் வரை அவமதிப்பு பொருட்டே அல்ல.. என்ன சொல்ல வருகிறார் ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப்?
சென்னை: காரியம் முடியும் வரை அவமதிப்பு பொருட்டே அல்ல.. என்கிற வாசகத்துடன் ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப் போட்ட ஃபேஸ்புக் பதிவு விவாதங்களை கிளப்பிவிட்டிருக்கிறது.
சசிகலாவை அதிமுகவில் சேர்க்கவே மாட்டோம் என முதல்வர் ஈபிஎஸ் தரப்பு திட்டவட்டமாக கூறிவிட்டது. ஆனால் ஓபிஎஸ் தரப்பில் இருந்து எந்த ஒரு பதிலும் வரவில்லை.
அதேநேரத்தில் ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப், சசிகலா நலம்பெற வேண்டும் என தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டார். இது மிகப் பெரும் சர்ச்சையானது. இத்தனைக்கும் சசிகலாவுக்கு ஆதரவாக சுவரொட்டி ஒட்டியவர்கள் அடுத்தடுத்து அதிமுகவில் இருந்து நீக்கப்படுகின்றனர்.
ஆனால் ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் ஜெயபிரதீப் நேற்று மீண்டும் ஒரு பதிவை ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருக்கிறார்.
மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார் கண்டுஞ்சார்
எவ்வெவர் தீமையு மேற்கொள்ளார் - செவ்வி
அருமையும் பாரா ரவமதிப்புங் கொள்ளார்
கருமமே கண்ணாயி னார்.
என்ற செய்யுளை விளக்கத்துடன் பதிவிட்டுள்ளார். அந்த விளக்கம்தான் பல கேள்விகளை எழுப்பி இருக்கிறது. உயரிய குறிக்கோளை உடையவர்கள் எடுத்துக் கொண்ட காரியம் முடியும்வரை அவமதிப்பு போன்றவற்றை எல்லாம் பொருட்டாகவே கருதமாட்டார்கள் என்கிறார் ஶ்ரீகுமரகுருபர சுவாமிகள் என்பதுதான் அந்த விளக்கம்.
ஏற்கனவே சசிகலாவை ஓபிஎஸ் ஆதரிக்க வாய்ப்புள்ளதாக அரசல் புரசலாக செய்திகள் கசிந்து வருகின்றன. இந்த நிலையில் ஓபிஎஸ் மகன் போட்டிருக்கும் பதிவு ஏதோ ஒரு விஷயத்தை சொல்லத்தான் வருகிறது.. அதாவது சசிகலாவுடன் சமாதானமாக போவதைத்தான் ஓபிஎஸ் தரப்பு பூடகமாக நூல்விட்டுப் பார்க்கிறதோ என்கிற விவாதத்தை கிளப்பிவிட்டுள்ளது.