’வெட்டி’ வீழ்த்திய நிர்வாகிகள்! தவெக மாநாட்டுக்கு பனையால் திடீர் வினை! அடுத்து என்ன ஆக்சன் தான்?
சென்னை: தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் மாநாட்டு திடல் அமையும் பகுதியில் எட்டு பனங்கன்றுகளை அரசு அனுமதியின்றி வெட்டி எறிந்ததாக சர்ச்சை எழுந்திருக்கிறது. பனை மரத்தையோ பனங்கன்றுகளையோ வெட்டுவதற்கு மாவட்ட ஆட்சியரின் அனுமதி வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு வரும் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே நடைபெற இருக்கிறது. மாநாட்டுக்கு இன்னும் ஒரு வாரமே இருக்கும் நிலையில் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தற்போது மாநாட்டுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழகம் முழுவதும் கொடியேற்றும் நிகழ்வுகள், சுவர் விளம்பரம், போஸ்டர்கள் என தமிழக வெற்றிக் கழகத்தினர் விளம்பர பணிகளை செய்து வருகின்றனர்.
மேலும் மாநாட்டுக்கு ஆட்களை அழைத்துச் செல்வதற்காக வாகனங்களை முன்னதாகவே அட்வான்ஸ் கொடுத்து புக் செய்து வருகின்றனர். மேலும் ஒவ்வொரு மாவட்டமாக சென்று புஸ்ஸி ஆன்ந்த் மாநாடு தொடர்பாக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு மாநாட்டுக்கான பந்தல் கால் ஊன்றும் நிகழ்ச்சியே மினி மாநாடு போல தான் நடைபெற்றது. இந்த நிலையில் தற்போது மாநாட்டுக்காக வரும் வாகனங்களுக்கு நான்கு பார்க்கிங் வசதிகள் செய்யப்பட்டு இருக்கிறது.
மாநாடு நடைபெறும் பகுதியில் பந்தல் மேடை உள்ளிட்டவை அமைக்க 85 ஏக்கர் பரப்பளவு நிலம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இங்கு 900 மேற்பட்ட கம்பங்கள் நடப்பட்டு, சுமார் 14,000 விளக்குகள் பொருத்தும் பணியானது நடைபெறுகிறது. மாநாட்டு மேடை மட்டும் 60 அடி அகலம் 170 அடி நீளத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது. இது மட்டுமல்லாமல் மாநாட்டுக்கு வரும் தொண்டர்களுக்கு வழங்குவதற்காக சுமார் 500-க்கும் மேற்பட்ட சின்டெக்ஸ் தொட்டிகள் குடிநீருக்காக அமைக்கப்படுகிறது.
300 நடமாடும் கழிப்பறைகளும் இருக்கிறது. மேலும், மாநாடு நடைபெறும் இடம் விவசாய நிலம் என்பதால் ஆங்காங்கே கிணறுகள், சிறுசிறு பள்ளங்கள் இருக்கிறது. இதை அடுத்து அவற்றை இரும்பு தடுப்புகள் மற்றும் மரப் பலகைகள் கொண்டு மூடப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை மாநாட்டில் தொண்டர்களுக்கு உணவு வழங்கலாம் என திட்டமிட்டு இருந்தது. இந்நிலையில் உணவுக்காக முண்டியடித்தால் கூட்ட நெரிசல் உள்ளிட்டவை ஏற்படலாம் என்பதற்காக தொண்டர்கள் வரும் வாகனங்களிலேயே உணவு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கிறது.
இந்த நிலையில் தற்போது தெரிந்தோ தெரியாமலோ மாநாட்டுக்கு ஒரு சிக்கல் முளைத்திருக்கிறது. மாநாடு நடக்கும் பகுதியில் ஏராளமான பனங் கன்றுகள் இருக்கின்றன. இந்த நிலையில் மேடை அமைக்கும் பகுதிக்கு அருகே 8 பனங்கன்றுகள் வெட்டி அகற்றப்பட்டதாக கூறப்படுகிறது. பொதுவாக பனை மரங்களையும் பனங் கன்றுகளையும் வெட்ட வேண்டும் என்றால் மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெற வேண்டும் என அரசின் உத்தரவு இருக்கிறது. இந்நிலையில் மாவட்ட ஆட்சியரின் எந்தவித அனுமதியும் இல்லாமல் பனங் கன்றுகள் வெட்டப்பட்டுள்ளதாக புகார் எழுந்திருக்கிறது. இந்நிலையில் இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட இருப்பதாகவும், விஜய் கட்சியினர் மீது நடவடிக்கை அல்லது அபராதம் விதிக்கப்படலாம் என கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications