கைதாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? தமிழ்நாடு உள்பட 4 மாநில ஓட்டுரிமையால் சிக்கல்.. ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரண்ட்
சென்னை: பிரபல நடிகர் பிரகாஷ் ராஜ்க்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. பிரகாஷ் ராஜ் தனது பெயரில் கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா என்று மொத்தம் 4 வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ளதாக தொடரப்பட்ட வழக்கில் பெங்களூர் நீதிமன்றம் இந்த வாரண்ட்டை பிறப்பித்துள்ளது.
கர்நாடகாவை சேர்ந்தவர் பிரகாஷ் ராஜ். இவர் கன்னடம், தமிழ், தெலுங்கு உள்பட பல்வேறு மொழிப்படங்களில் நடித்து வருகிறார். வில்லன், குணச்சித்திர வேடங்களில் பிரகாஷ் ராஜ் நடித்து வருகிறார். இவர் பிரதமர் மோடி மற்றும் பாஜகவை தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார்.

இதனால் அடிக்கடி பிரகாஷ் ராஜ் மற்றும் பாஜகவினர் இடையே எக்ஸ் வலைதள பக்கத்தில் கருத்து மோதல்கள் நடக்கும். சமீபத்தில் கூட பெங்களூரில் நடந்த கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் நீட் தேர்வு வினாத்தாள் வெளியானது தொடர்பாக மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். இதில் பிரகாஷ் ராஜ் பங்கேற்று ஆதரவு தெரிவித்தார்.
இந்நிலையில் தான் பிரகாஷ் ராஜ் தற்போது சட்ட பிரச்சனையை எதிர்கொண்டுள்ளார். அவருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதாவது பிரகாஷ் ராஜ் தனது பெயரில் 4 வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ளதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்றும் பெங்களூர் 48 வது கூடுதல் முதன்மை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
மேலும் அந்த மனுவில், ''இந்தியாவில் ஒருவர் ஒரு மாநிலத்தில் மட்டும் தான் வாக்காளர் அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும். ஆனால் பிரகாஷ் ராஜ் 4 மாநிலங்களில் வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ளார். கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் அவர் வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ளார். இது சட்டவிரோதமானது. இதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்'' என்று கூறப்பட்டு இருந்தது.
இந்த வழக்கை பெங்களூர் 48 வது கூடுதல் முதன்மை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் விசாரணை நடத்தியது. இந்த வழக்கில் பிரகாஷ் ராஜ் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று சம்மன் அனுப்பியது. ஆனால் பிரகாஷ் ராஜ் ஆஜராகவில்லை. இந்நிலையில் தான் நீதிமன்றம் பிரகாஷ் ராஜ்க்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது. இதனால் பிரகாஷ் ராஜ்க்கு கைதாகிறாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications