'தளபதி 63' படப்பிடிப்பில் சம்பவம்... அட்லீ மீது துணை நடிகை போலீசில் புகார்
சென்னை: நடிகர் விஜய்யை வைத்து, இயக்கி வரும் அட்லீ மற்றும் உதவி இயக்குனர்கள் மீது துணை நடிகை கிருஷ்ண தேவி போலீசில் புகார் அளித்துள்ளார்.
தெறி, மெர்சல் படத்தைத் தொடர்ந்து இயக்குனர் அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கப்படாத நிலையில், தற்காலிகமாக தளபதி 63 என்றழைக்கப்படுகிறது. இப்படத்தில், விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். மேலும், கதிர், ஜாக்கி ஷரூப், ரெபா மோனிகா ஜான், விவேக், யோகி பாபு, டேனியல், ஆனந்தராஜ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

ஏ.ஜி.எஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். பெண்கள் கால்பந்தாட்ட அணியின் பயிற்சியாளராக விஜய் நடிக்கிறார். படத்தின் படப்பிடிப்பு சென்னை ஈவிபி ஸ்டுடியோவில் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படத்தில் பணிபுரியும் துணை நடிகை கிருஷ்ணாதேவி அட்லீ மற்றும் உதவி இயக்குநர்கள் மீது போலீசில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகார் மனுவில், ஈவிபி ஃபிலிம் சிட்டியில் நடைபெற்று வரும் அட்லீயின் திரைப்படத்தில் வேலை பார்க்க வந்தேன். நான் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் போது அட்லீயும் அவரது உதவியாளர்களும் என்னை தகாத வார்த்தைகள் பேசி வேலை பார்க்க விடாமல் வெளியே அனுப்பி விட்டார்கள். எனவே அட்லீ மற்றும் அவரது உதவியாளர்களை விசாரித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன் என்று கூறப்பட்டுள்ளது.
படப்பிடிப்பின் போது சுத்தமில்லாத உணவு வழங்கப்பட்டதால் அதை தட்டிக்கேட்ட தன்னை அட்லீ முன்னிலையில் உதவி இயக்குநர் தாக்கியதாகவும் கிருஷ்ணா தேவி தெரிவித்துள்ளார். இதனால், திரையுலகத்தினரின் கவனம் அட்லீ பக்கம் திரும்பி உள்ளது.












Click it and Unblock the Notifications