கூட்டுறவு வங்கி நகைக்கடன்… சவரன் 1 லட்சம் தாண்டியதும் கூட்டம் ஏன்? ₹74,100 கோடி பின்னணி
சென்னை: தமிழகத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் இந்த ஆண்டு நகைக்கடன் வாங்குவது கடுமையாக உயர்ந்துள்ளது. கடந்த 2025 - 26 நிதியாண்டில் மட்டும் 65 லட்சம் பேருக்கு மொத்தம் 74,100 கோடி ரூபாய் நகைக்கடனாக வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம் தங்கம் விலை உயர்வுதான். தமிழகத்தில் பலர் தங்கள் அவசர தேவைக்கு நகைகளை அடமானம் வைப்பது வழக்கம். குறிப்பாக, எளிய மக்கள் தங்களின் உடனடி பணத்தேவைக்கு நகைகளையே முதன்மையான ஆதாரமாகக் கருதுகின்றனர்.
கூட்டுறவு துறையின் கீழ் இயங்கும் பல்வேறு கூட்டுறவு வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில், நகைக்கடன் பிரிவில் தங்க நகை அடமானத்திற்கு உடனுக்குடன் கடன் வழங்கப்படுகிறது.

கூட்டுறவு வங்கி நகைக்கடன்
தனியார் துறை வங்கிகள் மற்றும் தனியார் நகை அடகு நிறுவனங்களுடன் ஒப்பிடும்போது, கூட்டுறவு சங்கங்களில் வட்டி மிகக் குறைவாக இருக்கிறது. அதுமட்டுமில்லாமல், சொன்ன காலத்திற்குள் அசல் மற்றும் வட்டியைச் செலுத்தத் தவறினாலும், தனியார் நிறுவனங்களைப் போல நகைகளை உடனே ஏலம் விடும் நடவடிக்கைகளில் கூட்டுறவு நிறுவனங்கள் இறங்குவதில்லை. இதனால் பலர் கூட்டுறவு சங்கங்களையே தேர்வு செய்கிறார்கள்.
கடந்த ஆண்டில் 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு 6,000 ரூபாய் வீதம் கடனாக வழங்கப்பட்டது. அந்த காலகட்டத்தில் சர்வதேச நிலவரங்களால் நம் நாட்டில் ஒரு சவரன் தங்கம் விலை ஒரு லட்சம் ரூபாயைத் தாண்டியது. தங்கம் விலை ஏறியதற்கு ஏற்ப கூட்டுறவு வங்கிகளும் நகைக்கடன் தொகையை உயர்த்தின. இதனால்தான் கூட்டுறவு நிறுவனங்களில் 2025 - 26ல் 65 லட்சம் பேருக்கு 74,100 கோடி ரூபாய் வரை கடன் வழங்க முடிந்தது.
நகைக்கடன் தள்ளுபடி
கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, 2024 - 25 நிதியாண்டில் 70.28 லட்சம் பேருக்கு 62,001 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டது. ஆனால் 2025 - 26ல் கடன் வாங்கியவர்களின் எண்ணிக்கை 65 லட்சமாகக் குறைந்துள்ளது. அதாவது சுமார் 5 லட்சம் பேர் குறைவாகக் கடன் வாங்கியிருந்தாலும், வழங்கப்பட்ட மொத்த தொகை பல மடங்கு அதிகரித்துள்ளது. தங்கம் விலை உயர்வால் மட்டும் கடந்த ஓராண்டில் 12,099 கோடி ரூபாய் கூடுதலாகக் கடன் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. இதனால் கூட்டுறவு வங்கிகளில் பணப்புழக்கம் அதிகரித்துள்ளது.
1 சவரன் லட்சத்தை தாண்டியது
இது குறித்து கூட்டுறவுத் துறை அதிகாரி ஒருவர் சொல்லும்போது, "கடந்த ஆண்டில் தங்கம் நகை அடமானம் வைக்கும்போது, அந்த நகை தங்களுடையதுதான் என்பதற்கான முறையான ஆதாரத்தை வழங்க வேண்டும் என்பது உட்பட பல அம்சங்களுடன் கூடிய வரைவு விதியை ரிசர்வ் வங்கி வெளியிட்டது. ஆனால் இந்த கடுமையான விதிகள் தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்களுக்குப் பொருந்தாது என அறிவிக்கப்பட்டது.
இதுவும் மக்கள் அதிக அளவில் சங்கங்களுக்கு வந்து கடன் வாங்க ஒரு முக்கிய காரணமாக அமைந்தது. அதனுடன் தங்கம் விலை உயர்வும் சேர்ந்து கொண்டதால் நகைக்கடன் விநியோகம் இந்த அளவுக்கு அதிகரித்துள்ளது" என்றார்.
நகை கடன் - தங்கம் விலை
நம்முடைய தமிழகத்தை பொறுத்தவரை விவசாய கடன்களுக்கு அடுத்தபடியாக நகைக்கடன்களே கூட்டுறவுத் துறையின் முதுகெலும்பாக உள்ளன. தங்கம் விலை உயர்வு மற்றும் எளிமையான நடைமுறைகள் காரணமாக, தமிழக கூட்டுறவுத் துறையில் நகைக்கடன் புழக்கம் இந்த ஆண்டு புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. இதனால் சாமானிய மக்களுக்கு உடனடி பண உதவி கிடைக்கிறது. தங்கம் விலை இதே நிலையில் நீடித்தால் வரும் காலங்களில் இந்த நகைக்கடன் தொகை இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்..,,!!












Click it and Unblock the Notifications