கொரோனா 2வது டோஸ் தடுப்பூசி: இன்றும் முதல் நபராக ஊசி போட்டுக்கொண்ட டாக்டர் தேரணி ராஜன்
முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கான 2 ஆம் டோஸ் தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
சென்னை: தமிழகத்தில் முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கான 2 ஆம் டோஸ் தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. ஜனவரி 16ல் முதல் டோஸ் தடுப்பூசி போட்டவர்களுக்கு 28 நாட்களுக்கு பிறகு 2வது டோஸ் செலுத்தப்படுகிறது. ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை முதல்வர் தேரணி ராஜன் இன்றும் முதல்நபராக தடுப்பூசி போட்டுக்கொண்டார்.
Recommended Video
கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் 10 கோடிக்கும் மேற்பட்டோரை பாதித்துள்ளது. 24 லட்சம் பேர் உலகம் முழுவதும் கொரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 1 கோடிக்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டனர். ஒன்றரை லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு அனுமதியளித்தது. இதைத்தொடர்ந்து கடந்த 16ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி திட்டம் நடைமுறைக்கு வந்தது. இதை தொடர்ந்து நாடு முழுவதும் முன்களப்பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
இதில் மருத்துவர் என்ற அடிப்படையில் அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். தமிழகத்தில் 26நாட்களில் இதுவரை 2.27 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
28 நாட்களுக்குப் பிறகு இரண்டாம் கட்டமாக இன்று தமிழகத்தில் 166 மையங்களில் 3,027 பேருக்கு கோவிஷீல்டு, 99 பேருக்கு கோவாக்சின் என 3,126 பேருக்கு தடுப்பூசி போடப்படுகிறது. ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை முதல்வர் தேரணி ராஜன் இன்றும் முதல்நபராக தடுப்பூசி போட்டுக்கொண்டார்.
இதனிடையே தமிழகத்தில் 25,000 கொரோனா தடுப்பூசி வீணடிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் முன்கள மருத்துவ பணியாளர்களிடம் போதிய ஆர்வம் இல்லாததால் தடுப்பூசி போடும் பணிகள் சுணக்கம் அடைந்துள்ளன. மருத்துவ பணியாளர்கள் இடையே ஆர்வம் குறைவு எதிரொலியாக சுமார் 15 விழுக்காடு அளவுக்கு தடுப்பூசி மருந்துகள் வீணாகி இருப்பதாக தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குனரகம் தெரிவித்துள்ளது.
தடுப்பூசி மருந்துகளை வீணாக வைத்திருக்காமல் பதிவு செய்துவிட்டு தங்களது முறைக்காக காத்திருக்கும் மூத்த குடிமக்களுக்கு வழங்க வேண்டும் என்று தொற்று நோய் தடுப்பு மருத்துவ நிபுணர்கள் தமிழக அரசுக்கு அறிவுறுத்தியுள்ளனர். இதனிடையே மூத்த குடிமக்களுக்கு தடுப்பூசி வழங்க தயாராக இருப்பதாக தெரிவித்துள்ள தமிழக அரசு, மத்திய அரசின் அனுமதிக்காக காத்திருப்பதாக கூறியிருக்கிறது.