மொத்தம் 10.. சென்னை, மதுரை தனியார் மருத்துவமனைக்கு நோட்டீஸ்.. கொரோனா பலி எண்ணிக்கையில் சந்தேகம்
சென்னை: கொரோனா மரணங்கள் தொடர்பாக அரசுக்கு தகவல் அளிக்காத சென்னையை சேர்ந்த தனியார் மருத்துவமனைகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது மருத்துவ சேவை இயக்குனரகம்.
மருத்துவ சேவை இயக்குனரக இயக்குனர் குருநாதன் இதுபற்றி கூறுகையில், சென்னையில் உள்ள சில தனியார் மருத்துவமனைகள் உட்பட பத்து மருத்துவமனைகளுக்கு கொரோனா பலி தொடர்பான எண்ணிக்கையை உரிய முறையில் தராததற்காக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக ஜூலை 23-ஆம் தேதி விடுபட்டுப் போன 444 கொரோனா வைரஸ் தொடர்பான மரணங்கள் அறிக்கையில் சேர்க்கப்பட்டன.

விஜயபாஸ்கர் விளக்கம்
இது தொடர்பாக எதிர்க்கட்சிகள் விமர்சனங்களை முன்வைத்தன. ஆனால் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இதில் எந்த முறைகேடும் நடக்கவில்லை என்று தெரிவித்தார். மாரடைப்பு உள்ளிட்ட பிற காரணங்களால் மரணம் அடைந்தவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு ஒருவேளை பின்னர் கொரோனா உறுதி செய்யப்பட்டிருந்தால் மரணத்திற்கான காரணம் எதுவாக இருந்தாலும் அது கொரோனா எண்ணிக்கையில் கணக்கிடப்படுவதுதான் இந்த எண்ணிக்கை உயர்வுக்கு காரணம் என்று விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

விதிமுறை மாற்றம்
மத்திய அரசு மற்றும் ஐசிஎம்ஆர் போன்றவற்றின் பரிந்துரைகள் முன்பு அப்படி இல்லை என்றும், பிறகுதான் இந்த ஷரத்து அந்த விதிமுறைகளில் சேர்க்கப்பட்டதாகவும், எனவே பலி எண்ணிக்கை அதிகரித்து காட்ட வேண்டியதாக இருப்பதாகவும் விஜயபாஸ்கர் தெரிவித்திருந்தார்.

மதுரை மருத்துவமனைகள்
ஆனால், இதுபோன்ற மாறிவரும் நெறிமுறைகளுக்கு ஏற்ப பலி எண்ணிக்கையை தெரிவிக்காத மருத்துவமனைகளுக்குதான் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதேபோல மதுரையைச் சேர்ந்த இரண்டு தனியார் மருத்துவமனைகளுக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

முழு விவரம்
அதில் ஒரு மருத்துவமனை நோயாளியின் முழு விபரங்களை தெரிவிக்கவில்லை. அவர் எங்கே, எந்த ஆய்வு மையத்தில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார் என்ற தகவலை தெரிவிக்காதது நோட்டீஸ் அனுப்பப்பட்ட அதற்கான காரணம். மற்றொரு தனியார் மருத்துவமனை பிசிஆர் எனப்படும் கொரோனா வைரஸ் பரிசோதனையை மேற்கொள்ளாமல் ஆன்டிபாடி பரிசோதனையை மேற்கொண்டு நோயாளிக்கு சிகிச்சை அளித்துள்ளது. இது தவறான விஷயம் என்பதால் இதற்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
Recommended Video

கண்காணிப்பு தீவிரம்
ஆக மொத்தத்தில் தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொடர்பான சிகிச்சை அளிக்கும் தனியார் மருத்துவமனைகள், கடும் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டு உள்ளன என்பது மட்டும் தெரிகிறது.












Click it and Unblock the Notifications