தமிழகத்தில் இன்று 5,659 பேருக்கு கொரோனா தொற்று... 67 பேர் மரணம்... 5,610 பேர் டிஸ்சார்ஜ்..!
சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,659 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
நாள்தோறும் ஐந்தாயிரம் பேருக்கும் குறையாமல் கொரோனா பாதிப்புஉறுதிச்செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் தொடங்கிய கொரோனாவின் தாக்கம் 6 மாதங்களை கடந்தும் இன்னும் குறைந்தபாடில்லை.

எத்தனை பேர்
தமிழகத்தில் நாள்தோறும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து ஐந்தாயிரம் என்ற நிலையிலேயே இருக்கிறது. இன்றுமட்டும் மாநிலம் முழுவதும் 5,659 பேர் கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேபோல் கொரோனா தொற்றுக்கான சிகிச்சை பலனின்றி இன்று ஒரே நாளில் 67 பேர் தமிழகம் முழுவதும் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க சுகாதாரத்துறை தரப்பில் எவ்வளவோ முயற்சிகள் மேற்கொண்டும் உயிரிப்புகளை தடுக்க முடிவதில்லை.

தொற்று அதிகரிப்பு
இதற்கு காரணம் நோய் அறிகுறி தென்பட்டவுடன் அதற்கான சோதனைகளை மேற்கொண்டு உரிய மருந்துகளை எடுத்துக்கொள்வதில் ஏற்படும் கவனக்குறைவே எனத் தெரிவிக்கப்படுகிறது. தொற்று அதிகரித்த நிலையில் நோயாளிகள் மருத்துவமனைக்கு வருவதால் அவர்களை காப்பாற்ற முடியாத நிலை ஏற்படுகிறது. கொரோனா குறித்த சுய விழிப்புணர்வு ஊரடங்கு தளர்வுகளுக்கு பிறகு மெல்ல மறைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

குணமடைந்தனர்
இதனிடையே தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றில் இருந்து 5,610 பேர் நல் வாய்ப்பாக குணமடைந்து இன்று வீடு திரும்பியுள்ளனர். இன்றைய நிலவரப்படி தமிழகத்தில் 46,263 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது நேற்றைய எண்ணிக்கையை விட குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் என 186 கொரோனா சிகிச்சை மையங்கள் செயல்பட்டு வரும் நிலையில் இன்று மட்டும் 86,928 பேருக்கு சோதனை நடத்தப்பட்டன.

பெண்கள்
தமிழகத்தில் இன்று கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட 5,659 பேரில் ஆண்கள் மட்டும் 3,476 பேர் ஆவர். அதேபோல் பெண்கள் என எடுத்துக்கொண்டால் 2,183 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்த புள்ளிவிவர கணக்குகளை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications