ஜெட் வேகத்தில் கொரோனா.. கலெக்டர்களுடன், தலைமைச் செயலாளர் ஆலோசனை.. கூடுதல் கட்டுப்பாடுகள் வருகிறது?
சென்னை: தமிழகத்தில் கொரோனா அதிகரித்து வருவதால் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் மாவட்ட கலெக்டர், மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.
தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு மீண்டும் ஜெட் வேகத்தில் சென்று வருகிறது. நாளுக்கு நாள் கொரோனா தினசரி பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வந்த போதிலும் கொரோனாவை கட்டுப்படுத்த முடியவில்லை.

தமிழகத்தில் கொரோனா
கொரோனாவை தடுக்க தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாட்டுகள் விதிக்கப்பட்டுள்ளன. தினமும் இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு போடப்பட்டுள்ளது. வார இறுதி நாள் ஊரடங்கும் போடப்பட்டுள்ளது. மேலும் தியேட்டர்கள், மால்கள், உடற்பயிற்சி கூடங்கள்,சலூன்கள் திறக்க அனுமதி இல்லை.

தொற்று அதிகம்
கோவில்களில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை, வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு இ-பாஸ் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர், கோவை, நெல்லை, திருப்பூர், திருச்சி உள்ளிட்ட சில மாவட்டங்களில் தொற்று அதிகமாக உள்ளது.

தலைமைச் செயலாளர் ஆலோசனை
அதுவும் கடந்த ஆண்டை விட இந்த முறை சிறுவர்களை அதிகமாக கொரோனா தாக்கி வருவதும் மிகுந்த கவலையை ஏற்படுத்தி உள்ளது. தொடர் உயிரிழப்பும் சோகத்தை ஏற்படுத்தி வருவதால் தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள் தேவை என்று மருத்துவ நிபுணர்கள் கூறி வருகின்றனர். தமிழகத்தில் கொரோனா அதிகரித்து வருவதால் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

கூடுதல் கட்டுப்பாடுகள்
மாவட்ட கலெக்டர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களுடன் மாவட்டங்களில் கொரோனா நிலவரம், தொற்றை தடுக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள், தடுப்பூசி போடும் பணிகள் குறித்து தலைமைச் செயலாளர் ஆலோசனை நடத்துகிறார். மேலே குறிப்பிட்டபடி பல்வேறு மாவட்டங்களில் தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால் இங்கு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. கலெக்டர்கள், மருத்துவ நிபுணர்களின் கருத்துக்களை கேட்டறிந்து இது தொடர்பான உத்தரவு வெளியிடப்படும் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications