சென்னை மக்களே அலட்சியம் வேண்டாம்.. இந்த நேரத்தில் அந்த தவறை செய்யாதீங்க.. மாநகராட்சி ஆணையர் வார்னிங்
சென்னை: பொதுமக்கள் அடுத்த 3 மாதத்திற்கு கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். ஏனெனில் அக்டோபர் மற்றும் நவம்பரில் சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் எச்சரித்துள்ளார்.
சென்னையில் லாக்டவுன் தளர்வுக்கு பின்னர் மீண்டும் 1300, 1400 என்கிற அளவில் பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கட்டுப்பாட்டு மண்டலங்கள் இல்லாமல் இருந்த சென்னையில் அதன் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
ஆனால் பலர் சென்னையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாஸ்க் அணிய வேண்டியதன் அவசியத்தை மறந்து அலட்சியத்துடன் சுற்றுவதால் நிலைமை மீண்டும் கவலை அளிக்கும் வகையில் மாறிவிடுமோ என்ற அச்சம் நிலவுகிறது.

ஆணையர் பிரகாஷ் பங்கேற்பு
இந்நிலையில் சென்னை அண்ணா நகர் என்.எஸ்.கே நகரில் செயல்பட்டு வரும் கொரோனா தடுப்பு சிறப்பு முகாமை சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், சென்னை மாநகராட்சி கூடுதல் ஆணையர் மதுசூதனன் ரெட்டி ஆகியோர் நேற்று ஆய்வு செய்தார்கள்.

மைக்ரோ கட்டுப்பாட்டு பகுதி
பின்னர் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேசுகையில், சென்னையில் ஒரு சில மண்டலங்களில் மட்டும் பாதிப்பு அதிகமாகி இருக்கிறது. அந்த இடங்களில் இரவு நேரங்களில் சோதனை செய்ய ஏற்பாடு செய்திருக்கிறோம். மற்றவர்களுக்கு தொற்று ஏற்படக்கூடாது என்ற நல்ல எண்ணத்தில் தான் தெருக்களில் மைக்ரோ அளவிலான கட்டுபாட்டு பகுதி ஏற்படுத்தப்படுகிறது. என்றார்.

நவம்பரில் அதிகரிக்கும்
இதையடுத்து மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் பேசுகையில், கொரோனா பாதிப்பு குறைய துவங்கி உள்ள இந்த நேரத்தில் முகக்கவசம் அணிவதை நிறுத்தினால் பாதிப்பு அதிகமாகிவிடும். எனவே பொதுமக்கள் அடுத்த 3 மாதத்திற்கு கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். மேலும் அக்டோபர், நவம்பர் மாதத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாக வாய்ப்பு இருக்கிறது.

தகரம் அடிப்பது இல்லை
எனவே கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிக்காத நபர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுப்போம். அரசியல் கட்சிகள் கூட்டம் நடத்த வேண்டாம் என்று வலியுறுத்தி உள்ளோம். தனி நபர் வீடுகளில் தகரம் அடிப்பதை 25 நாட்களுக்கு முன்பாகவே நிறுத்திவிட்டோம். ஒரு சில இடங்களில் தவறுதலாக தகரம் அடிக்கப்பட்ட நிகழ்வுகள் நடைபெற்று இருக்கலாம் அவ்வாறு நடைபெற்று இருந்தால் அது உடனடியாக சரி செய்யப்படும்.

தடை செய்யப்பட்ட பகுதிகள்
சென்னையில் முன்பெல்லாம் ஒரு பகுதியில் 10 நபர்கள் அல்லது 5 நபர்கள் இருந்தால் மட்டுமே தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவித்து வந்தோம். ஆனால் தற்போது 2 பேருக்கு கொரோனா இருந்தால் கூட தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவித்து வருகிறோம்" இவ்வாறு கூறினார்.












Click it and Unblock the Notifications