சசிரேகாவுக்கு வெறும் 23 வயசுதான்.. திடீரென அப்படியே மயங்கி சரிந்து.. உறைய வைத்த மரணம்!
சென்னையில் கொரோனா தாக்கி 23 வயது பெண் உயிரிழந்தார்
சென்னை: ஹாஸ்டலில் திடீரென மயங்கி விழுந்து இறந்துவிட்டார் 23 வயசு சசிரேகா .. இதற்கான காரணம் என்னவென்றே தெரியாமல் பெற்றோர்கள் கதறி அழுதது காண்போரை கண்கலங்க வைத்துவிட்டது!
தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்தபடியே உள்ளது.. இருந்தாலும், நோயாளிகளின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது... அதிலும் நோய் தொற்று இரண்டாம் அலை வீச வாய்ப்பில்லை என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஏற்கனவே நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழ்நாட்டில் நோய்தொற்று முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் உள்ள நிலையில், டிஸ்சார்ஜ் ஆகி செல்வோரின் எண்ணிக்கையும் அதிகரித்தபடியேதான் உள்ளது... அதேசமயம், பரிதாபமான உயிரிழப்புகளும் நடந்து வருகின்றன. இந்த நோய் வயதானவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களைதான் அதிகம் தாக்கும் என்று சொல்லப்பட்டு வரும் நிலையில், இளம் வயதினரும் சேர்ந்து பலியாகி வருவது பெருத்த அதிர்ச்சியை ஆங்காங்கு ஏற்படுத்தி வருகிறது.
சசிரேகா
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தாலுகாவை சேர்ந்தவர் சசிரேகா.. 23 வயதாகிறது.. பாடியில் உள்ள ஒரு ஃபேமஸ் துணிக்கடையில் வேலை பார்த்து வந்தார்.. பாடி சிடிஎச் சாலை பிரிட்ஜ் அருகே இந்த துணிக்கடை உள்ளது.. வெளியூரில் வந்த பெண் என்பதால், பாடி பாலாஜி நகரில் உள்ள துணிக்கடைக்கு சொந்தமான ஒரு ஹாஸ்டலில் சசிரேகா தங்கியிருந்தார்.
மூச்சுதிணறல்
இந்நிலையில், சசிரேகா ஹாஸ்டலில் இருந்தபோது, திடீரென உடல்வலி வந்தது.. அடுத்து மூச்சுத்திணறல் ஏற்பட்டது.. பிறகு அடுத்த சில நிமிடங்களிலேயே மயங்கி கீழே விழுந்துவிட்டார்.. இதை பார்த்த, ஹாஸ்டல் ஊழியர்கள் சசிரேகாவை மீட்டு உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அதிர்ச்சி
அங்கு சசிரேகாவை செக் செய்து பார்த்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக சொன்னார்கள்.. என்ன காரணம் என்று உடனடியாக தெரியவும் இல்லை.. இதையடுத்து, சசிரேகாவின் குடும்பத்துக்கு தகவல் அளிக்கப்பட்டது.. இதனால் பதறி அடித்து கொண்டு வந்த பெற்றோர், மகளின் சடலத்தை கண்டு கதறி அழுதனர்.. எப்படி இறந்தால் என்றே தெரியாமல் அவர்கள் குழம்பி தவித்து கதறியது காண்போரை நிலைகுலைய வைத்துவிட்டது.
கொரோனா
இதையடுத்து, சசிரேகாவின் அப்பா, கொரட்டூர் போலீசில் வழக்கு பதிவு செய்தார்.. அதன்பேரில் விசாரணையும் துவங்கியது... பின்னர், அளவுக்கு அதிகமான உடல் வலி மற்றும் மூச்சுத் திணறல் இருந்ததால் சசிரேகாவுக்கு கொரோனா பாதிப்பு இருக்கலாம் என்று கருதப்படுகிறது.. இப்போது பரிசோதனைக்கு பிறகு சசிரேகாவின் உடல் ஒப்படைக்கப்படுகிறது.. திடீரென 23 வயது பெண் மயங்கி விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை சென்னையில் ஏற்படுத்தி வருகிறது.