சென்னையில் 2 செய்தியாளர்களுக்கு கொரோனா.. சுகாதாரத்துறை செய்தியாளர் சந்திப்பு திடீர் ரத்து.. பரபரப்பு
சென்னையில் இரண்டு செய்தியாளர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து இன்று நடக்க வேண்டிய சுகாதாரத்துறை செய்தியாளர் சந்திப்பு ரத்து செய்யப்பட்டு உள்ளது.
சென்னை: சென்னையில் இரண்டு செய்தியாளர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து இன்று நடக்க வேண்டிய சுகாதாரத்துறை செய்தியாளர் சந்திப்பு ரத்து செய்யப்பட்டு உள்ளது.
Recommended Video
தமிழ்கத்தில் நாளுக்கு நாள் கொரோனா தீவிரம் அடைந்து வருகிறது. சென்னையில் மட்டும் 240 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,372 ஆக உள்ளது. நேற்று ஒரே நாளில் 49 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனாவில் இருந்து தமிழகத்தில் நேற்று மட்டும் 82 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை தமிழகத்தில் 365 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
சென்னையில் இருவர்
இந்த நிலையில் இன்று சென்னையில் இரண்டு செய்தியாளர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. ஒரு அச்சு ஊடகம் மற்றும் ஒரு தொலைக்காட்சியில் பணியாற்றும் செய்தியாளருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவர்களுக்கு சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர்களுக்கு எப்படி கொரோனா ஏற்பட்டது என்று விசாரணை நடந்து வருகிறது.
அச்சம் ஏற்பட்டுள்ளது
இதையடுத்து தற்போது சென்னையில் செய்தியாளர்கள் இடையே கொரோனா அச்சம் ஏற்பட்டுள்ளது. பத்திரிகையாளர்களுக்கு கொரோனா கண்டறியும் சிறப்பு பரிசோதனை முகாம் நடத்த வேண்டும் என்று பத்திரிக்கையாளர் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது. உடனே விரிவாக இந்த சோதனையை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அதோடு அரசும், அதிகாரிகளும் நேரடி செய்தியாளர் சந்திப்புகளைத் தவிர்க்க வேண்டும் என்றும் பத்திரிக்கையாளர் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.
செய்தியாளர் சந்திப்பு ரத்து
இந்த நிலையில் கொரோனா பாதிப்பை அடுத்து சுகாதாரத்துறை சார்பில் கொரோனா பற்றிய செய்தியாளர் சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. இன்று மாலை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்திப்பதாக இருந்தது. ஆனால் திடீர் என்று செய்தியாளர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட காரணத்தால் செய்தியாளர் சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.
அறிக்கை மட்டும்
இனி சில நாட்களுக்கு அறிக்கையில் மட்டுமே தகவல் அளிக்கப்படும் என்று விளக்கப்பட்டுள்ளது. இதையயடுத்து நாளை முதல் செய்தியாளர்களுக்கு சிறப்பு கவுண்ட்டர்கள் அமைக்கப்பட்டு பரிசோதனை தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்றும் மாநகராட்சி அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இன்று செய்தியாளர்கள் மற்றும் ஊடகத்துறை பணியாளர்கள் கொரானா தொற்று நோய் பரிசோதனை செய்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.