சென்னையில் நம்பிக்கை தரும் முதியவர்கள்- கொரோனாவை வென்ற 94 வயது பாட்டி..71 வயது மகள்!
சென்னை: சென்னையில் கொரோனா பாதிக்கப்பட்ட 94 வயது பாட்டி சிகிச்சை முடிந்து நலமுடன் வீடு திரும்பியுள்ளார். அத்துடன் அவரது 71 வயது மகளும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்திருப்பது நம்பிக்கையை அதிகரித்திருக்கிறது.
உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருக்கும் அதேநேரத்தில் கொரோனாவால் குணமடைவோர் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே இருக்கிறது. இதனால் கொரோனா குறித்த அச்சமும் தகர்க்கப்பட்டு வருகிறது.
கொரோனாவை முதியவர்களும் வெல்ல முடியும் என்ற நம்பிக்கையை சென்னை பாட்டிகள் விதைத்துள்ளனர். சென்னை வளசரவாக்கத்தைச் சேர்ந்தவர் கெளரி. 94 வயதாகும் கெளரி பாட்டிக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதியானது.
கொரோனா காலத்தில் நீட், ஜேஇஇ தேர்வுகளை இந்தியா நடத்துவது நியாயமற்றது.. சிறுமி கிரேட்டா ஆவேசம்
இதனால் அரும்பாக்கம் தனியார் மருத்துவமனை ஒன்றில் கெளரி பாட்டி அனுமதிக்கப்பட்டார். கெளரி பாட்டிக்கு சர்க்கரை நோய் பாதிப்பும் இருந்தது. தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் கெளரி பாட்டி குணமடைந்துள்ளார்.
கெளரி பாட்டியின் மகளான 71 வயது ஜெயலட்சுமிக்கும் கொரோனா தொற்று அறிகுறி இருந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஜெயலட்சுமிக்கு கொரோனா பாதிப்பு தொடக்க நிலைதானாம். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவரும் தற்போது குணமடைந்துள்ளார்.
கெளரி பாட்டியும் மகள் ஜெயலட்சுமியும் இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகினர்.