மாஸ்க் வேண்டும்.. லெட்டர் அனுப்பிய ஸ்டான்லி டாக்டர்.. தூத்துக்குடிக்கு தூக்கி அடித்த சுகாதாரத்துறை!
சென்னை ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவர் சந்திரசேகரை தூத்துக்குடி மருத்துவக் கல்லூரிக்கு மாற்றி தமிழக அரசு சார்பாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சென்னை: சென்னை ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவர் சந்திரசேகரை தூத்துக்குடி மருத்துவக் கல்லூரிக்கு மாற்றி தமிழக அரசு சார்பாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது
கொரோனாவிற்கு எதிராக தமிழகத்தில் தீவிரமாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சென்னையில் மட்டும் கொரோனா காரணமாக 10 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
தமிழகம் முழுக்க கொரோனா காரணமாக 18 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஒருவர் பலியாகிவிட்டார். ஒருவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுவிட்டார். மீதம் இருக்கும் 16 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
சென்னையில் எங்கு எல்லாம் சிகிச்சை
சென்னையில் தனியார் மருத்துவமனை உட்பட 4 முக்கியமான மருத்துவமனைகள் கொரோனாவிற்கு எதிராக தீவிரமாக சிகிச்சை அளித்து வருகிறது. முக்கியமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை, சென்னை ஸ்டான்லி மருத்துவமனை, சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனை ஆகிய மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இங்கு இருக்கும் மருத்துவர்களுக்கு போதிய வசதிகளை செய்து கொடுக்கவில்லை, போதிய மாஸ்க் மற்றும் கை உறைகள் இல்லை என்று புகார் உள்ளது.
இடமாற்றம்
இந்த நிலையில்தான் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையின் மூத்த சர்ஜிக்கல் மருத்துவர் சந்திரசேகரை தூத்துக்குடி மருத்துவக் கல்லூரிக்கு மாற்றி தமிழக அரசு சார்பாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மருத்துவ கல்லூரிக்கு இவரை துணை பேராசிரியராக மாற்றி தமிழக சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. கொரோனா பரவி வரும் இப்படிப்பட்ட சூழலில் இவரின் பணியிட மாற்றம் செய்தது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
கடிதம் எழுதி இருந்தார்
முகக்கவசம் உள்ளிட்டவற்றைக் கேட்டு இவர் கடந்த நான்கு நாட்களுக்கு முன் அரசுக்கு கடிதம் எழுதி இருந்தார். மருத்துவர்களுக்கு போதிய முக கவசம் இல்லை. 6 மணி நேரத்திற்கு ஒருமுறை இதை மாற்ற வேண்டும். ஆனால் எங்களிடம் முக கவசம் இல்லை. மிகவும் ஆபத்தான சூழ்நிலையில் பணியாற்றி வருகிறோம். அதனால் எங்களுக்கு போதுமான அடிப்படை வசதிகளை செய்து கொடுங்கள் என்று கோரிக்கை வைத்து இருந்தார். இதனால்தான் தற்போது இவர் இடமாற்றம் செய்யப்பட்டு இருக்கிறார் என்று கூறப்படுகிறது.
|
உடனே இடமாற்றம்
இந்த செயலை திமுக எம்பி டாக்டர் செந்தில்குமார் கண்டித்து இருக்கிறார். இவரின் பணியிட மாற்றத்திற்கு எது வேண்டுமானாலும் காரணமாக இருக்கட்டும், ஆனால் இப்படிபட்ட எமர்ஜென்சி காலகட்டத்தில் அவரை பணியிட மாற்றம் செய்வது தவறு, 21 நாள் லாக் டவுன் இருக்கும் போது இப்படி நடவடிக்கை எடுப்பது அந்த மருத்துவரையும், அவரின் குடும்பத்தையும் மன ரீதியாக பாதிக்கும். உடனே சுகாதாரத்துறை அமைச்சர் இந்த உத்தரவை திரும்ப பெற வேண்டும், என்று செந்தில்குமார் குறிப்பிட்டுள்ளார்.