தமிழகம்: லாக்டவுனில் இன்று அதிகாலை முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல்- தேநீர் கடைகள் மூடல்!
சென்னை: தமிழகம் முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள 2 வார லாக்டவுனில் இன்று காலை முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன. தமிழகம் முழுவதும் தேநீர் கடைகள், காய்கறி, பூ, பழம் விற்பனை செய்யும் நடைபாதை கடைகள் இன்று திறக்கப்படவில்லை.
தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 30 ஆயிரத்துக்கும் அதிகமாக உள்ளது. அதேபோல் ஒருநாள் கொரோனா மரணங்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
இன்று முதல்.. தமிழகத்தில் கடுமையாக்கப்பட்ட லாக்டவுன்.. புதிய கட்டுப்பாடுகள் என்னென்ன? - முழு விபரம்
2 வார லாக்டவுன்
இதனால் ஏற்கனவே தமிழகத்தில் 2 வார கால முழு லாக்டவுன் அமல்படுத்தப்பட்டது. சில தளர்வுகளுடன் கூடிய வகையில் இந்த முழு லாக்டவுன் அமல்படுத்தப்பட்டது. இருந்தபோதும் முழுமையாக லாக்டவுன் கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்படவில்லை. இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின், அனைத்து கட்சிக் கூட்டத்தை கூட்டி விவாதித்தார்.
தேநீர் கடைகள் மூடல்
இதனையடுத்து இன்று அதிகாலை 4 மணி முதல் லாக்டவுனில் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன. இந்த புதிய கட்டுப்பாடுகளின் அடிப்படையில் மாநிலம் முழுவதும் தேநீர் கடைகள் அடைக்கப்பட்டன. காய்கறி, பூ, பழம் விற்பனை செய்யும் நடைபாதை கடைகளும் திறக்கப்படவில்லை.
மளிகை கடைகள் 4 மணிநேரம் மட்டும்
மேலும் தனியாக செயல்படுகின்ற மளிகை, பலசரக்குகள், காய்கறிகள், இறைச்சி, மீன் விற்பனை செய்யும் கடைகள் ஆகியவை மட்டும் குளிர்சாதன வசதி இன்றி காலை 6 மணிக்கு திறக்கப்பட்டன. இந்த கடைகள் அனைத்தும் முன்பு பகல் 12 மணிவரை செயல்பட அனுமதிக்கப்பட்டிருந்தன. தற்போது முற்பகல் 10 மணி வரை மட்டுமே இந்த கடைகள் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளன.
நடைபாதை கடைகள் அனுமதி இல்லை
மளிகை, பலசரக்குகள், காய்கறிகள், இறைச்சி, மீன் கடைகள் தவிர, இதர கடைகள் அனைத்தும் திறக்க தடை விதிக்கப்பட்டதால் இவைகள் திறக்கப்படவில்லை. ATM, பெட்ரோல் டீசல் பங்குகள் ஆகியவை வழக்கம் போல செயல்படுகின்றன. ஆங்கில மற்றும் நாட்டு மருந்துக் கடைகள் திறக்கப்படுகின்றன.