இத்தாலியில் இதேதான் நடந்தது.. நாமும் அதே தவறை செய்துவிட்டோம்.. எம்பி அன்புமணி முக்கிய குற்றச்சாட்டு!
கொரோனா வைரஸ் ஆரம்ப காலத்தில் பரவிய போது இத்தாலி செய்த அதே தவறை தமிழக மக்களும் செய்துவிட்டனர் என்று பாமக எம்பி டாக்டர் அன்புமணி ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னை: கொரோனா வைரஸ் ஆரம்ப காலத்தில் பரவிய போது இத்தாலி செய்த அதே தவறை தமிழக மக்களும் செய்துவிட்டனர்,அதற்கும் அரசு உறுதுணையாக இருந்துவிட்டது என்று பாமக எம்பி டாக்டர் அன்புமணி ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுக்க 21 நாட்களுக்கு லாக் டவுன் செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக மக்கள் இதனால் வீட்டிற்குள் முடங்கி உள்ளனர். இந்தியாவில் மொத்தம் 595 பேருக்கு கொரோனா தாக்கியுள்ளது. மகாராஷ்டிராவில் அதிகமாக 116 பேருக்கு கொரோனா தாக்கியுள்ளது.
தமிழகத்தில் 18 பேருக்கு கொரோனா தாக்கியுள்ளது. அதில் ஒருவர் குணம் அடைந்துவிட்டார். மதுரையை சேர்ந்த ஒருவர் பலியாகிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனா வைரஸ்
இந்த நிலையில் கொரோனா வைரஸ் குறித்து பாமக எம்பி டாக்டர் அன்புமணி ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார். அதில், இந்தியா முழுவதும் முழு அடைப்பை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கூறி வந்தேன். 3 வாரம் முழு அடைப்பை இப்படி கடைபிடிப்பதுதான் சரியானது. அதுதான் ஸ்டேஜ் 3ஐ தடுக்கும். நாம் தற்போது ஸ்டேஜ் 2-3 இரண்டுக்கு இடையில் இருக்கிறோம் . ஸ்டேஜ் 3 வந்தால் அது மோசமாக மாறும். நம்மை மோசமாக பாதிக்கும்.
மொத்தமாக காலி செய்யும்
நம்மை அடித்து காலி செய்யும். முழு தடை மட்டும்தான் இதை தடுக்க முடியும். தமிழ்நாட்டில் கொரோனா இல்லை, கம்மியாக இருக்கிறது என்று எண்ண வேண்டாம். தமிழ்நாட்டில் இந்த எண்ணிக்கை குறைவாக இருக்கிறது என்பதை ஒரு மருத்துவனாக என்னால் நம்ப முடியாது. தற்போது மக்கள் எல்லாம் கூட்டம் கூட்டமாக வீட்டிற்கு சென்றுள்ளனர். இதை அரசு சரியாக திட்டமிடவில்லை.
அதிக பேருந்துகள் இல்லை
அதிக பேருந்துகள் இல்லாததால் மக்கள் கூட்ட நெரிசலில் சென்றனர். விடுமுறை விட்டது போல மக்கள் கூட்டம் கூட்டமாக சென்றனர். தீபாவளி, பொங்கலுக்கு வெளியே செல்வது போல சென்றுவிட்டு வந்தனர். இதனால் நகரங்களில் இருந்து கொரோனா கிராமங்களுக்கு சென்றுள்ளது. இதேதான் இத்தாலியில் நடந்தது. அங்கு விடுமுறை விடப்பட்டதும் மக்கள் வெளியே சென்றனர். வெளியே சென்று கூத்தடித்தனர்.
இத்தாலியில் இதேதான் நடந்தது
இதுதான் இத்தாலியில் வைரஸ் பரவ காரணம். இத்தாலி மோசமாக பாதிப்பு அடைய மக்கள் இப்படி செய்ததுதான் காரணம். அங்கு இதன் மூலம்தான் தற்போது பலி எண்ணிக்கை வேகமாக உயர்ந்து வருகிறது. இதே தவறை தற்போது தமிழகம் செய்துள்ளது. கொரோனா இருக்கும் போது எல்லோரும் இப்படி கும்பலாக வீட்டிற்கு சென்றது மன்னிக்க முடியாத குற்றம். தமிழக அரசு இதை அனுமதித்து இருக்க கூடாது, என்று அன்புமணி குறிப்பிட்டுள்ளார்