"தொட்டு விட தொட்டு விட தொடரும்".. வாத்தியார் சொல்லிட்டார்.. இனியும், கேட்காம இருந்தா அவ்வளவுதான்!
சென்னை: "தொட்டு விட தொட்டு விட தொடரும்" என்று எம்ஜிஆர் பாடிக் கொண்டிருக்கும் சத்தம் ஊரெல்லாம் காற்றில் நுழைந்து காதில் துளைத்து செல்கிறது! எல்லாம் இந்த கொரோனாவால் வந்தது.. வாத்தியார் பாடலை கிராம மக்களுக்கு விழிப்புணர்வு பாடலாக்கி கொண்டிருக்கிறார்கள் நம் நெட்டிசன்கள்!
கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க அடிப்படையே யாரும் யாரையும் தொடக்கூடாது.. நெருக்கம் இருக்ககூடாது.. கூட்டமே கூட கூடாது.. அதனால்தான் சுய ஊரடங்கு, 144 தடை உத்தரவு என ஒவ்வொன்றாக அமல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த கொரோனா வைரஸ் குறித்து பல்வேறு விழிப்புணர்வுகளும் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.. விழிப்புணர்வு என்பது பொதுவாக அரசாங்கம் முன்னெடுத்து செல்லும் அல்லது இயக்கம், சங்கம் சார்பாக விழிப்புணர்வு நிகழ்த்தப்படும்.
ஆனால் கொரோனாவை பொறுத்தவரை தனிநபர்களே களம் இறங்கிவிட்டனர்.. இது உயிர் பிரச்சனை என்பதால் முக்கியத்துவம் தந்து பார்க்கப்படுகிறது. அந்த வகையில், ஒருபுது வித விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.. இது முழுக்க முழுக்க கிராமப்புற மக்களுக்காகவே நம் நெட்டிசன்கள் ஏற்படுத்தி வருகினற்னர்.. இது ஒரு எம்ஜிஆர் பாடல்.
"தர்மம் தலைகாக்கும்" படத்தில் வரும் தொட்டு விட தொட்டுவிட தொடரும் என்ற பாடல்தான் அது.. இந்த படத்தில் எம்ஜிஆர் ஒரு டாக்டர்.. ஒரு சீனில் எம்ஜிஆருடன் நோயாளி போல் சரோஜாதேவி நடித்திருப்பார்.. தனக்கு காய்ச்சல் வந்துவிட்டது பொய்யாக என்று சொல்லவும், எம்ஜிஆர் சரோஜாதேவி கையை பிடித்து நாடி பார்ப்பார்.. அப்போது வரும் லவ் பாட்டுதான் இது.
"தொட்டுவிட தொட்டுவிட தொடரும்... கை பட்டுவிட பட்டுவிட மலரும்" என்பதுதான்.. இந்த பாடல் பட்டிதொட்டிகளில் ஒலிக்காத நாளே அன்று இல்லை.. இன்றும்கூட கிராம மக்களுக்கு எம்ஜிஆர்தான் சகலமும்.. அந்த வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், யாரையும் தொடக்கூடாது, வைரஸ் பரவும் என்பதற்காகவும் இந்த பாடலை நெட்டிசன்கள் டிரெண்டாக்கி வருகின்றனர்! எதற்கோவோ பாடி வைத்த பாடல், இன்று நம் எல்லாருக்குமே ஒரு பாடமாகி வருவதும் அறிவியல் விசித்திரம்தான்!