போதுமான அளவு கொரோனா டெஸ்டிங் ஏற்கனவே நடக்கிறது.. பொதுநல வழக்கை முடித்து வைத்த சென்னை ஹைகோர்ட்!
சென்னை: கொரோனா பரிசோதனைகள் அதிகளவில் நடைபெறுவதால் பரிசோதனையை அதிகரிக்ககோரிய வழக்கை முடித்து வைத்தது சென்னை உயர்நீதிமன்றம்.
திருவண்ணாமலை மாவட்டம் இருங்கல் கிராமத்தைச் சேர்ந்த முனிகிருஷ்ணன் என்பவர் தொடர்ந்துள்ள பொதுநல மனுவில், தமிழகத்தில் கொரோனா தொற்று முதன்முதலாக மார்ச் 7ஆம் தேதி காஞ்சிபுரத்தில் கண்டறியப்பட்டது முதல், அதன் காரணமாக 144 தடை உத்தரவு மே 3 வரை நீட்டிக்கப்பட்டது வரை சுட்டிக்காட்டியுள்ளார்.

ஊரடங்கு உத்தரவை இரண்டாவது முறையாக நீட்டித்துள்ள மத்திய மாநில அரசுகள் கொரோனா தொற்று பரிசோதனை நடத்துவதற்கு எவ்வித நடவடிக்கையும் விரிவுபடுத்தவோ, விரைவுபடுத்தவோ இல்லை என்றும் மனுவில் கூறியுள்ளார். குறிப்பாக கொரோனா தொற்றை விரைந்து கண்டுபிடிக்கக் கூடிய ரேப்பிட் டெஸ்ட் கருவிகளை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.
குறிப்பாக ஏப்ரல் 14ஆம் தேதி சுகாதாரத்துறை கணக்கின்படி 48 ஆயிரத்து 440 பேர் தனிமைபடுத்தபட்டு உள்ளதாக கூறும் நிலையில், 12 ஆயிரத்து 746 பேரிடம் மட்டுமே பரிசோதனை நடத்தப்பட்டதாகவும், தனிமைப்படுத்தப்பட்டவர்களிடம் தொடர்பில் இருந்தவர்களிடமோ, குடும்பத்தினரிடமோ கொரோனா தொற்று பரிசோதனை செய்யவில்லை எனவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இதன் காரணமாக நாளுக்கு நாள் கொரோனா தொற்று உள்ளவர்கள் அதிகரிக்கும் நிலையில் இருப்பதாகவும், அதனை கருத்தில் கொண்டு கொரோனா தொற்று உள்ளவர்களிடம் தொடர்புடையவர்களுக்கு கொரோனா பரிசோதனையை விரைவுபடுத்த மத்திய மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டுமென மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.
இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, வழக்கு குறித்து மத்திய மாநில அரசுகள் பதிலளிக் உத்தரவிடப்பட்டது. மீண்டும் இந்த வழக்கு நீதிபதி சத்தியநாராயணன் மற்றும் நீதிபதி அனிதா சுமந்த் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் நாள் ஒன்றுக்கு 10,000 விதம் பரிசோதனை நடைபெறுவதாக நீதிமன்றத்திலே தெரிவித்தார். அதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்கள்












Click it and Unblock the Notifications