அங்கிட்டு எதுவானாலும் சொந்த ஊரில்தான்.. இங்கிட்டு வாழ்ந்தாகனுமே.. வடமாநில தொழிலாளர்கள் தத்தளிப்பு
சென்னை: கொரோனா தொற்று நோய் பரவலால் தமிழகத்தில் பல்வேறு பணிகளில் ஈடுபட்டிருக்கும் சொற்ப கூலிகளான வட இந்திய தொழிலாளர்களின் நிலைமை மிகவும் பரிதாபத்துக்குரியதாகவும் ரத்தம் தோய்ந்ததாகவும் இருக்கிறது.
Recommended Video
தமிழகத்தில் தமிழருக்கே வேலை! வட இந்தியர்கள் தமிழர் வேலைகளை ஆக்கிரமித்துவிட்டார்கள்.. இந்த விசனம் இயல்பானதுதான்.. நியாயமானதுதான்.. சரி பஞ்சம் பிழைக்க வந்த வட இந்திய தொழிலாளர்களின் நிலைமைதான் என்ன? கொஞ்சம் நெருங்கித்தான் பார்த்தால் நெருக்குருகித்தான் நிற்க வேண்டும்.

பணிதேடும் தொழிலாளர்கள்
ஒட்டுமொத்த தேசமே கொரோனாவால் சுய ஊரடங்குக்கு தன்னை உட்படுத்திக் கொண்டிருக்கிறது.. அந்த தருணத்திலும் என் மைத்துனருக்கு மத்திய பிரதேசத்தில் இருந்து ஒரு தொலைபேசி அழைப்பு.. கட்டுமான நிறுவனத்தில் 15 பேர் பணியில் சேர வருகிறோம் என.. நிலவரம் கலவரமாகிக் கிடப்பதால் காத்திருக்க சொல்லி தொலைபேசியை துண்டிக்கிறார் மைத்துனர்.

அங்கதான் போய் சேருவோம்
இன்னொரு பக்கம்.. மதுரையில் ஒரு பிரபல கட்டுமான நிறுவனத்தில் பணிபுரிந்த அஸ்ஸாமைச் சேர்ந்த தொழிலாளியிடம் கொரோனா நிலவரம் குறித்தும் ஊர் திரும்புகிறீர்களா? என்ற கேள்வியையும் முன்வைத்ததுதான் தாமதம்.. கண்களில் நீர் ததும்ப,, நான் செத்தாலும் எங்க ஊரில்தான் சாவேன்.. எப்படியாச்சும் ஊருக்கு போயே தீருவேன் என்கிறார். எந்த போக்குவரத்தும் இல்லையே என்கிற கேள்வி முடியும் முன்னரே பதில் வருகிறது.. சம்பாதித்த அத்தனை காசும் செலவானாலும் ஏதோ ஒரு வண்டியை அங்கங்க பிடிச்சாவது ஊர் போய் சேர்ந்துவிடுவோம் என்பதுதான்.

ஊர் சேர போராட்டம்
இது கட்டுக் கதைகளல்ல கேரளாவில் இருந்து ஆளுக்கு ரூ10,000 கொடுத்து 20 பேர் கொண்ட தொழிலாளர்கள் குழு பீகாரை சென்றடைந்திருக்கிறது. அதேபோல் டெல்லியில் இருந்து கொல்கத்தாவுக்கு 20 பேர் கொண்ட குழு ரூ1 லட்சம் வரை செலவழித்து மாறி மாறி ஊர் போய் சேர்ந்திருக்கிறார்கள். இப்படியானவர்கள்தான் கொரோனாவுக்கான சுய ஊரடங்கையும் பொருட்படுத்தாமல் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை நேற்று முற்றுகையிட்டுள்ளனர். எல்லாமும் போனால் பரவாயில்லை என திருப்பூரையும் காலி செய்துவிட்டு கிளம்பியிருக்கிறார்கள்.

பரிதாபத்துக்குரிய ஜனங்க
ஆம் ஒருபுறம் மடிந்தாலும் உறவுகளே.. இன்னொருபக்கம் உறவுகளுக்காக கண்காணாத பாஷை புரிபடாத தேசத்தில்.. கொஞ்சம் யோசித்தால் நிச்சயம் பரிதாபத்துக்குரியவர்களாகத்தான் வட இந்திய கூலி தொழிலாளர்கள் இருக்கிறார்கள் அதனால்தான் விபரீதமான தருணங்கள் அத்தனையிலும் சொந்த மண்ணுக்கு ஆலாய் பறக்கிறது வடக்கத்தி ஜனம்!












Click it and Unblock the Notifications