தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு குறித்து ஆலோசனை
சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை ஒத்திவைப்பது தொடர்பாக தமிழக அரசு ஆலோசனை நடத்திவருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
உலக நாடுகளில் ஒருநாள் கொரோனா பாதிப்பில் இந்தியா முதலிடத்தில் இருந்து வருகிறது. இந்தியாவின் ஒருநாள் கொரோனா பாதிப்பு 1 லட்சத்தை கடந்துவிட்டது.
இதனால் பல மாநிலங்களில் பல்வேறுவிதமான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. தமிழகத்திலும் நாளை சட்டசபை தேர்தல் வாக்களிப்புக்குப் பின்னர் தீவிர கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட உள்ளன.
இந்த நிலையில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளையும் ஒத்திவைப்பது தொடர்பாக தமிழக அரசு ஆலோசனை நடத்துவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சென்னை தலைமை செயலகத்தில் கல்வித்துறை முதன்மை செயலாளர் இது தொடர்பான ஆலோசனைகளை மேற்கொண்டதாகவும் கூறப்படுகிறது.
12-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாக தமிழக அரசு எந்த நேரத்திலும் முக்கிய அறிவிப்பை வெளியிடக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.