தமிழக அமைச்சர் துரைக்கண்ணு கொரோனா தொற்று பாதிப்பால் கவலைக்கிடம்- தீவிர சிகிச்சை: மருத்துவமனை அறிக்கை
சென்னை: தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணுவிற்கு கொரோனா தொற்று உறுதியானதாக காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து காவேரி மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் கூறுகையில், எங்கள் மருத்துவமனையில் கடந்த 13-ஆம் தேதி மூச்சுத்திணறல் காரணமாக அமைச்சர் துரைக்கண்ணு (72) அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா உறுதியானது.

அவருக்கு ஏராளமான துணை நோய்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு சிடி ஸ்கேன் எடுத்ததில் அவரது நுரையீரலில் 90 சதவீதம் பாதிப்புள்ளது. அவர் ஐசியூவில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு எக்மோ, செயற்கை சுவாச உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. துரைக்கண்ணுவின் உடல்நிலை குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கேட்டறிந்தார். அவருடன் அமைச்சர்கள் ஜெயக்குமார் மற்றும் சி விஜயபாஸ்கர் வந்திருந்தனர் என மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் தாயார் இறந்த தகவலை அறிந்து அவரிடம் நலம் விசாரிப்பதற்காக அமைச்சர் துரைக்கண்ணு கடந்த 13-ஆம் தேதி காலை சென்னையிலிருந்து சேலத்திற்கு காரில் சென்று கொண்டிருந்தார்.
காலை 10 மணி அளவில் திண்டிவனம் அருகே கார் சென்று கொண்டிருந்த போது அமைச்சர் துரைக்கண்ணுக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் அவருக்கு மருத்துவக் குழுவினர் முதலுதவி சிகிச்சை அளித்து சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதையடுத்து அவர் மேல் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் அவருக்கு இன்று எக்மோ கருவி பொருத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications