கொரோனா கிளஸ்டராக மாறிய சென்னை ஐஐடி.. இன்று ஒரே நாளில் 33 பேருக்கு பாதிப்பு.. அனைவருக்கும் டெஸ்ட்
சென்னை: சென்னை ஐஐடி வளாகத்தில் 100க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ள அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
எனவே விடுதியில் தங்கி உள்ள அனைத்து மாணவர்களுக்கும் கொரோனா வைரஸ் பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.
Recommended Video

இந்தியாவின் முன்னணி கல்வி நிறுவனங்களில் ஒன்று ஐஐடி மெட்ராஸ். நாடு முழுக்க மற்றும் வெளிநாடுகளிலிருந்தும் இங்கு மாணவர்கள் வருகிறார்கள்.

திடீர் பரவல்
உலகம் முழுக்க உள்ள கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, இங்கு வெளிநாட்டை சேர்ந்த யாரும் தற்போது தங்கியிருந்து பயிலவில்லை என்ற போதிலும் கூட திடீரென கொரோனா வைரஸ் பரவல் அங்கு அதிகரித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மாணவர்களிடம் அதிகரிக்கும் பாதிப்பு
நேற்று வரை 71 பேர் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பாதிக்கப்பட்டனர். அதில் ஞாயிற்றுக் கிழமையான நேற்று ஒரே நாளில் 32 புதிய கேஸ்கள் பதிவாகியுள்ளன. ஆனால் இன்று ஒரே நாளில் 33 கேஸ்கள் பதிவாகியுள்ளன. எனவே பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 104 என்ற அளவுக்கு அதிகரித்துள்ளது. எனவே ஐஐடி மெட்ராஸ் வளாகம் முழுக்க தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக மாற்றப்பட்டு உள்ளது. தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், இன்று ஐஐடி சென்று ஆய்வுகளை நடத்தினார்.

தனிமைப்பகுதி
வெளியிலிருந்து யாரும் உள்ளே செல்லவும், உள்ளே இருந்து யாரும் வெளியே செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அனைத்து துறைகள், மையங்கள், நூலகங்கள் உடனடியாக மூடப்படுகிறது. அடுத்த உத்தரவு அமலுக்கு வரும் வரை இந்த நடைமுறை நீடிக்கும்.

வீட்டிலிருந்து வேலை
அனைத்து, பணியாளர்கள், ஆய்வு மாணவர்கள் வீட்டிலிருந்து பணியாற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். விடுதியில் தங்கி உள்ள பணியாளர்கள், மாணவர்கள், தங்களுக்குள் சமூக இடைவெளியை பின்பற்றிகொள்ள வேண்டும் என்று ஐஐடி மெட்ராஸ் அதிகாரப்பூர்வ சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கல்லூரிகளை திறக்க அனுமதித்த நிலையில் இப்படியான ஒரு பாதிப்பு ஐஐடி மெட்ராசில் ஏற்பட்டுள்ளது. பிற கல்லூரிகளும் தக்க முன்னெச்சரிக்கையோடு இருக்க வேண்டிய அவசியத்தை இது உணர்த்துகிறது.












Click it and Unblock the Notifications