மக்க மனுசர் எட்டுவைக்க கூட இடம் இல்லாத அந்த தாம்பரம் ரயில்வே ஸ்டேஷன்தான்யா இது!
சென்னை: கொரோனா வைரஸால் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்தான் எத்தனை எத்தனை மாற்றங்களை உடனுக்குடன் நிகழ்த்திக் கொண்டிருக்கிறது. இதற்கு தாம்பரம் ரயில்நிலையமும் நல்ல உதாரணம்.
சென்னையில் பிரதான அடையாளமே தியாகராயர் நகர் ரங்கநாதன் தெரு. விடுமுறை நாள்தான் என்று இல்லை.. அத்தனை நாட்களிலும் மூச்சுவிடக்கூட முடியாத படி மக்கள் நெரிசல் அலைமோதும் குறுகிய தெரு அது.

வெறிச் தி.நகர்
அதுவும் பண்டிகை காலங்களில் தியாகராயர் நகர் பேருந்து நிலையத்தை தாண்டக் கூட முடியாது. ஒவ்வொரு அடியையும் எடுத்து வைப்பதற்குள் பல மணிநேரம் கடந்துவிடும். ஆனால் அதே தியாகராயர் நகரும் ரங்கநாதன் தெருவும் தங்களது 'கூட்டங்களை' மவுனிக்கச் செய்துவிட்டு மைதானங்களாகிவிட்டன.

தாம்பரம் ரயில்நிலையம்
இதேநிலைமைதான் சென்னை தாம்பரம் ரயில்நிலையமும். தென்மாநிலங்களை சென்னையுடன் இணைக்கும் ரயில் நிலையம்... பிற மாவட்ட மக்களுக்கான சென்னையின் நுழைவு வாயில்.. தாம்பரத்தில் அத்தனை போக்குவரத்தும் இரவு பகலும் இடைவிடாது இயங்கிக் கொண்டே இருக்கும். அதுவும் ரயில் நிலையத்தை சொல்ல வேண்டியதே இல்லை.

மக்கள் நெருக்கடி
இடைவிடாது கடந்து செல்லும் மின்சார ரயில்கள்.. கண்ணிமைக்கும் நேரத்தில் வந்து சேரும் எக்ஸ்பிரஸ் ரயில்கள். திபுதிபுவென பெருந்திரளாக இறங்கி நடைமேடைகளில் எட்டு வைக்க கூட இடம் இல்லாதவகையில் நெருக்கியடித்துக் கொண்டு நகர பெரும்பாடுபடும் ஜனம்.. இப்படித்தான் நாம் பார்த்த தாம்பரம் ரயில் நிலையம்... ஆனால் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் தாம்பரம் ரயில்நிலையம் தனது இயல்பை இழந்துவிட்டது.

நடமாட்டமே இல்லை
துப்புரவுப் பணியாளர்களின் இடைவிடாத கடமை தொடருகிறது.. ஆங்காங்கே ஒன்றிரண்டு பேர் இளைப்பாறுதலுக்கு வந்தவர்களாக அமர்ந்திருக்கின்றனர். மற்றபடி லீவு விட்ட பள்ளிக்கூடம் போல மனிதர்களின் நெருக்கடியில்லாமல் நிம்மதியாக இருக்கிறது நம்ம தாம்பரம் ரயில்நிலையம்.












Click it and Unblock the Notifications