Exclusive: 15 டூ 18 வயதுள்ள மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி.. எப்படி இருந்தது முதல் நாள் அனுபவம்?
சென்னை: 15 முதல் 18 வயதுடையோருக்கு இன்று முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கின. ஓமிக்ரான் பரவல் அதிகரித்துள்ளதால் 100 சதவீதம் தடுப்பூசி போட வேண்டும் என சோழிங்கநல்லூர் மண்டல மருத்துவ அலுவலர் மருத்துவர் சாந்தி அறிவுறுத்தியுள்ளார்.
ஓமிக்ரான் வைரஸ் பரவல் அதிகரித்து வருவதையடுத்து பூஸ்டர் டோஸ் தடுப்பூசியும் குழந்தைகளுக்குத் தடுப்பூசி செலுத்தவும் மத்திய அரசு அறிவித்தது. அதன்படி இன்று முதல் 15 முதல் 18 வயதுள்ள பிரிவினருக்கு தடுப்பூசி போடும் திட்டம் நாடு முழுவதும் தொடங்கியது.
இதற்காக கோவின் இணையதளத்தில் ஜனவரி 1-ஆம் தேதி முதல் தங்கள் விவரங்களை பதிவிட்டு முன்பதிவு செய்யலாம். 2007 மற்றும் அதற்கு முன் பிறந்தவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளத் தகுதியானவர்கள். இவர்கல் கோவின் தளத்தில் பதிவு செய்யலாம். நேரடியாக தடுப்பூசி மையத்திற்கு சென்று பதிவிடலாம்.

கோவாக்சின்
15 முதல் 18 வயதுள்ள பிரிவினருக்கு கோவாக்சின் தடுப்பூசி மட்டுமே செலுத்தப்படுகிறது. இந்த தடுப்பூசி செலுத்திய 28 நாட்கள் கழித்து 2ஆவது டோஸ் செலுத்த வேண்டும். தடுப்பூசி செலுத்த வரும் மாணவர்கள் ஆதார் கார்டுடன் வர வேண்டும். இல்லாவிட்டால் பள்ளியில் வழங்கப்பட்ட அடையாள அட்டை, 10ஆம் வகுப்பு சான்றிதழ் ஆகியவற்றை எடுத்து வர அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னை ஒக்கியம் துறைப்பாக்கம்
இந்த முகாம் தமிழகத்திலும் இன்று தொடங்கிய நிலையில் சென்னை ஒக்கியம் துறைப்பாக்கத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒன் இந்தியா தமிழ் சார்பில் களஆய்வு மேற்கொண்டோம். அப்போது அந்த பள்ளியில் தடுப்பூசி போடும் இடத்திற்கு மாணவர்கள் ஆதார் அட்டை அல்லது அரசு அனுமதித்த சான்றுடன் அமர்ந்திருந்தனர்.

சிறியம்மை
அப்போது சோழிங்கநல்லூர் மண்டல மருத்துவ அலுவலர் டாக்டர் சாந்தி கூறுகையில் இதுவரை நீங்கள் "பெரியம்மை, சிறியம்மை, டெட்டனஸ், மஞ்சள் காமாலை, மீசில்ஸ், ருபெல்லா உள்ளிட்டவைகளை சிறிய வயது முதல் போட்டுள்ளோம். தற்போது கொரோனா அதிகரித்து வருகிறது. இதிலிருந்து பாதுகாக்க பெரியவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அது போல் குழந்தைகளுக்கும் கொரோனா தடுப்பூசி போட வேண்டும் இல்லையா, அதற்காகத்தான் நீங்கள் இங்கு வந்துள்ளீர்கள்" என கூறி மாணவர்களுக்கு தடுப்பூசியின் அவசியத்தை அந்த அதிகாரி புரிய வைத்தார்.

பிரச்சினைகள்
இதையடுத்து அங்கு பெண் மருத்துவர் ஒருவர் ஒவ்வொரு மாணவரின் ஆதார் கார்டை சரி பார்த்து அவர்களுக்கு உடல் ரீதியாக வேறு ஏதேனும் பிரச்சினைகள், இதய பிரச்சினை, சுகர், பிபி, மரபு நோய்கள், அலர்ஜி உள்ளிட்டவை இருக்கிறதா என கேட்டு அவர்களது உடலை பரிசோதனை செய்கிறார். அதன் பின்னர் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. மாணவர்களுக்கு அங்கிருந்தவர்கள் தைரியம் அளித்தனர்.

100 சதவீதம்
இதுகுறித்து டாக்டர் சாந்தி ஒன் இந்தியாவுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில் முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி இன்று முதல் 15 வயது முதல் 18 வயது வரையிலான குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுகிறோம். அனைத்து பள்ளிகளிலும் ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தடுப்பூசி போடப்படுகிறது. கோவாக்சின் போடுகிறோம். முதல் டோஸ் போட்டு அடுத்த 28 நாட்கள் கழித்து இரண்டாவது டோஸ் போடப்படும். ஓமிக்ரான் பரவல் அதிகரித்து வருவதால் 100 சதவீதம் தடுப்பூசி போட வேண்டும் என அனைவரையும் கேட்டுக் கொள்கிறோம் என்றார்.












Click it and Unblock the Notifications