என்னாச்சு.. சில நாட்களாக தமிழகத்தில் திடீரென குறைக்கப்பட்ட கொரோனா டெஸ்டிங்? இதுதான் பின்னணி!
சென்னை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக குறைவாக கொரோனா சோதனைகளை செய்ய என்ன காரணம் என்ற விவரம் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 536 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11,760 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 4,406 பேர் குணமடைந்து உள்ளனர்.
தற்போது 7,270 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக இருக்கிறார்கள். சென்னையில் 7117 பேருக்கு கொரோனா உள்ளது. சென்னையில் நேற்று மட்டும் 364 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் நேற்று 3 பேர் உயிரிழந்ததையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 81 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பரவல் மற்றும் தோற்றம் குறித்து விசாரிக்க திட்டம்.. ஹு அதிரடி முடிவு.. சீனாவிற்கு சிக்கல்!
கொரோனா சோதனை
தமிழகத்தில் நேற்று 11121 கொரோனா மாதிரிகள் சோதனை செய்யப்பட்டது. இதுவரை 337841 மாதிரிகள் தமிழகத்தில் கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. அதேபோல் 322508 பேருக்கு தமிழகத்தில் கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் தமிழகத்தில்தான் அதிகமான நபர்களுக்கு கொரோனா சோதனைகள் செய்யப்பட்டுள்ளது .
சோதனை குறைவு
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக திடீர் என்று கொரோனா சோதனைகள் குறைவாக செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தில் தொடக்க நாட்களில் தினமும் 500- 600 கொரோனா சோதனைகள் மட்டுமே செய்யப்பட்டது. அப்போது 10க்கும் குறைவான சோதனை மையங்கள் மட்டுமே இருந்தது. ஆனால் தற்போது தமிழகத்தில் 61 சோதனை மையங்கள் உள்ளது. இதனால் இந்த மாதம் தொடக்கத்தில் மிக அதிக அளவில் சோதனை செய்யப்பட்டு வந்தது.
அதிக கேஸ்கள்
தினமும் 13 ஆயிரம் -14 ஆயிரம் வரை சோதனைகள் செய்யப்பட்டு வந்தது. இதனால் தமிழகத்தில் கேஸ்கள் அதிகமாக வந்தது. ஆனால் தற்போது தமிழகத்தில் திடீர் என்று கொரோனா சோதனைகள் குறைவாக செய்யப்பட்டு வருகிறது. நேற்று 11 ஆயிரம் சோதனைகள் செய்யப்பட்டுள்ளது. அதற்கு இரண்டு நாட்கள் முன் வரை தொடர்ச்சியாக 10 ஆயிரம் மற்றும் 11 ஆயிரம் என்று மட்டுமே சோதனைகள் செய்யப்பட்டு வந்தது.
ஏன் இப்படி ?
தமிழகத்தில் இப்படி திடீர் என்று 2000 -3000 சோதனைகளை குறைவாக செய்ய தொடங்கி உள்ளனர். தமிழக அரசு மீது இதனால் இணையத்தில் சிலர் புகார் வைத்தனர். இப்படி குறைவாக டெஸ்ட் செய்வதால்தான் கொரோனா கேஸ்களும் குறைய தொடங்கி உள்ளது என்று குறிப்பிட்டனர். இந்த நிலையில் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக குறைவாக கொரோனா சோதனைகளை செய்ய என்ன காரணம் என்ற விவரம் வெளியாகி உள்ளது.
இதுதான் காரணம்
அதன்படி முதலாவதாக தமிழகத்தில் கொங்கு மண்டலங்களில் கொரோனா கேஸ்கள் குறைவாக உள்ளது. ஈரோடு, நாமக்கல், திருப்பூர், கோவையில் ஒரு கொரோனா கேஸ் கூட இல்லை. அங்கு கொரோனா பரவல் பெரிதாக இல்லை. அதேபோல் அங்கு புதிதாக கிளஸ்டர் எதுவும் இல்லை. அதேபோல் அறிகுறியோடும் யாரும் பெரிதாக இல்லை. இதனால் அங்கு தற்போது கொரோனா சோதனைகள் குறைவாக செய்யப்பட்டு வருகிறது.
அறிகுறி அதிகம் இல்லை
அங்கு கொரோனா அறிகுறி அல்லது காண்டாக்ட் உள்ளவர்கள் அதிகம் இல்லை. அப்படியே காண்டாக்ட் இருந்தவர்கள் இடம் சோதனை செய்தாலும் அவர்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை. இதனால் கொரோனா சோதனைகள் அங்கு குறைவாக செய்யப்பட்டு வருகிறது. இன்னொரு பக்கம் தமிழகத்தில் கொரோனா சோதனை செய்ய தகுதியான நபர்கள் குறைவாக உள்ளனர். அதாவது ஒருவருக்கு கொரோனா சோதனை செய்ய வேண்டும் என்றால் அதற்கு சில வரையறை இருக்கிறது.
தகுதியாக என்ன
கொரோனா அறிகுறி, கொரோனா உள்ள நபருடன் தொடர்பு கொண்டது, காண்டாக்ட் டிரேசிங்கில் கண்டுபிடிக்கப்பட்ட நபர்கள் என்று நிறைய வரையறை இருக்கிறது. தினமும் இந்த வரையறைக்குள் வரும் நபர்கள் குறைவாக இருக்கிறார்கள். இதனால் தமிழகத்தில் கொரோனா சோதனைகள் குறைவாக செய்யப்பட்டு வருகிறது . இதுதான் கொரோனா கேஸ்கள் குறைவாக வரவும் காரணம் ஆகும்.