மாநகராட்சி தேர்தல் பெண்களுக்கு 50% இட ஒதுக்கீட்டை எதிர்த்த வழக்கு: உயர் நீதிமன்றம் தள்ளுபடி
மாநகராட்சி தேர்தல் பெண்களுக்கு 50% இட ஒதுக்கீட்டை எதிர்த்த வழக்கு: உயர் நீதிமன்றம் தள்ளுபடி
சென்னை மாநகராட்சியில் பெண்களுக்கு 50 சதவீதத்துக்கும் அதிகமான வார்டுகளை பெண்களுக்கு ஒதுக்கியதை எதிர்த்த வழக்கு திரும்பப் பெறப்பட்டதை அடுத்து, தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி வார்டு ஒதுக்கீடு தொடர்பாக கடந்த 2019 ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அறிவிப்பின்படி, ஆண்களை விட பெண்களுக்கு அதிக வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறி, சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆர். பார்த்திபன் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அவர் தனது மனுவில், சென்னை மாநகராட்சிக்கான மொத்தமுள்ள 200 வார்டுகளில் பட்டியலினத்தவர் மற்றும் பட்டியலினத்தைச் சேர்ந்த பெண்களுக்கு மொத்தமாக 32 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
மீதமுள்ள 168 இடங்களில் கடந்த 2016 ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட தமிழ்நாடு நகராட்சி சட்டத்தின் அடிப்படையில் பெண்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடாக, 84 இடங்கள் தான் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டு இருக்கவேண்டும் எனவும், ஆனால் பெண்களுக்கு 89 இடங்களும் , ஆண்களுக்கு 79 இடங்களும் ஒதுக்கபட்டுள்ளது.
பெண்களுக்கு கூடுதலாக வார்ட்கள் ஒதுக்கப்பட்டுள்ளது பாரபட்சமானது இதை சரிசெய்ய கோரி நவம்பர் 13 ம் தேதி தமிழ்நாடு அரசுக்கும், மாநில தேர்தல் ஆணையருக்கு மனு அளிக்கப்பட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை" என மனுவில் தெரிவித்துள்ளார்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்.. திமுகவை முந்தி வேகம் எடுக்கும் அதிமுக.. பரபர அறிவிப்பு
இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சென்னை மாநகராட்சி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "மாநகராட்சி வார்டுகளில் பெண்களுக்கு 50 சதவீதத்துக்கு குறையாமல் இட ஒதுக்கீடு வழங்கி 2019 ஆம் ஆண்டு அறிவிப்பு வெளியிடப்பட்ட பின், மண்டல வாரியாக ஒதுக்கீடு வழங்கக் கூறி அறிவிப்பாணை வெளியிடப்பட்டது. ஒற்றைப்படைகளில் வார்டுகள் எண்ணிக்கை வரும் போது, கூடுதலாக வரும் ஒரு வார்டு பெண்களுக்கு ஒதுக்கப்பட்டது" எனத் தெரிவித்தார்.
இதையடுத்து மாநகராட்சி சட்டத்தின் குறிப்பிட்ட சட்டத் திருத்தங்களை எதிர்த்து புதிய வழக்கு தொடர்வதாக கூறி, இந்த வழக்கை திரும்பப் பெற அனுமதி கோரினார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், மனுவை வாபஸ் பெற அனுமதித்து. வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.