வேற லெவலில் மாறப்போகும் சென்னை! செப்டம்பர் தான் டார்கெட்.. விறுவிறு பணியில் மாநகராட்சி.. செம பிளான்
சென்னை: சென்னையில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள சாலைகள் மற்றும் நடைபாதைகளில் கழிவுகளை அகற்றும் தீவிர தூய்மை பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக சாலைகளில் கேட்பாரற்று நிற்கும் வாகனங்களை அகற்றும் பணியையும் மாநகராட்சி மெற்கொண்டுள்ளது. இந்த பணிகளை செப்டம்பருக்குள் முடிக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
தமிழகத்தின் தலைநகரான சென்னையை மேம்படுத்தும் பல்வேறு பணிகளை சென்னை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது. சாலையோரங்களில் நடைபாதைகள் அமைப்பது, பூங்காக்களை மேம்ப்டுத்துவது உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. சென்னையை பொறுத்தவரை மாநகராட்சிக்கு பெரும் சவாலாக இருப்பது கழிவுகளை அகற்றுவதுதான்.

மாநகராட்சி பிளான்: நெருக்கமான சாலைகளை கொண்ட சென்னையின் பல சாலைகளிலும் நடைபாதைகள் குப்பைகளாக காட்சியளிக்கின்றன. இதனால், பாதசாரிகளும் வாகன ஓட்டிகளும் சிரமப்பட வேண்டிய நிலையே உள்ளது. எனவே இந்த நிலையை மாற்றவே சென்னை மாநகராட்சி சூப்பர் பிளான் ஒன்றை கையில் எடுத்துள்ளது.
அதாவது, சென்னை மாநகராட்சி பகுதிகளில் இருக்கும் அனைத்து சாலைகளிலும் கழிவுகளை அகற்றும் தீவிர தூய்மைப் பணிகளை வரும் செப்டம்பர் மாதத்துக்குள் முடிக்க திட்டமிட்டிருப்பதாக புதிதாக பொறுப்பேற்ற மாநகராட்சி ஆணையர் ஜெ. குமரகுருபரன் கூறியுள்ளார். சென்னையை பொறுத்தவரை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 418 கி.மீ நீளத்துக்கு பஸ்கள் செல்லக் கூடிய அளவில் 488 -சாலைகள் உள்ளன.

செப்டம்பர் மாதத்துக்குள்: இந்த சாலைகளில் வாகனங்கள் சீராக பயணிக்கவும் நடைபாதைகளில் மக்கள் சிரமம் இன்றி நடந்து செல்லவும் ஏதுவாக தூய்மை பணிகளை மேற்கோண்டு குப்பைகளை அகற்றும் பணியை மாநகராட்சி கடந்த 22 ஆம் தேதி முதல் தொடங்கியது. இந்த பணிகள் தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. மாநகராட்சி ஆணையர் ஜெ. குமரகுருபரன் இரவில் அவ்வபோது நேரில் விசிட் அடித்து இப்பணிகளை கண்காணித்து வருகிறார்.
900 வாகனங்கள் அகற்றம்: இதுவரை 1000 டன்னிற்கும் அதிகமாக குப்பை மற்றும் கட்டிட கழிவுகள் ஆகியவை அகற்றப்பட்டு இருக்கின்றன. இந்த தூய்மை பணிகளை வரும் செப்டம்பர் மாதத்துக்குள் முடிக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. அதன்படி, சாலையோரம் கேட்பாரின்றி கிடக்கும் பழைய வாகனங்களை அகற்றுதல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை 900 க்கும் மேற்பட்ட வாகனங்கள் அகற்றப்பட்டுள்ளது.
மாநகராட்சி ஆணையம் பேச்சு: சென்னை மாநகராட்சி ஆணையர் இது தொடர்பாக கூறும் போது, "சென்னை மாநகராட்சி பஸ் வழித்தட சாலைகளில் உள்ள குப்பைகள் மற்றும் கட்டுமான கழிவுகளை அகற்றும் தூய்மைப் பணிகள் 3 மண்டலங்களில் சோதனை அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த 22 ஆம் தேதி முதல் இந்த பணிகள் நடைபெற்று வருகிறது.
அனைத்து சாலைகளிலும் தீவிர தூய்மை பணிகளை செப்டம்பர் மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டு இருக்கிறது. சாலையோரம் கைவிடப்பட்ட நிலையில் கிடக்கும் வாகனங்களை காவல்துறையிடம் என்.ஓ.சி பெற்ற பின்னர் ஏலம் விடப்படும்" என்றார்.
போக்குவரத்து நெரிசல் குறையும்: சென்னை மாநகராட்சிகளில் பல்வேறு சாலைகளில் போக்குவரத்து நெரிசலுக்கு கேட்பாரற்று கிடக்கும் வாகனங்களும் ஒரு காரணமாக இருக்கின்றன. இந்த தீவிர தூய்மை பணியில் இந்த வாகனங்களை அகற்றும் போது போக்குவரத்து நெரிசல் சற்று குறையும் என்பது வாகன ஓட்டிகளின் கருத்தாக உள்ளது. அதேபோல நடைபாதைகளிலும் குப்பைகளை அகற்றும் போது பாதசாரிகள் சிரமம் இன்றி நடந்து செல்ல முடியும் என்பதால் மக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications