5 வருசத்துல ஊழல்.. “தேர்தலில் பாஜகவுக்கு ஆபத்து?” லோக் நிதி - CSDS சர்வேயில் வெளிவந்த தகவல்!
சென்னை: கடந்த 5 ஆண்டு காலத்தில் நம் நாட்டில் ஊழல் வெகுவாக அதிகரித்துவிட்டது என லோக் நிதி - சிஎஸ்டிஎஸ் நடத்திய சர்வேயில் மக்கள் கருத்துகளை வெளிப்படுத்தி உள்ளனர். லோக்சபா தேர்தலுக்கு முன்னதாக நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் இது தெரியவந்துள்ளது.
மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 19 முதல் ஜூன் 1ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதற்கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில், இந்த மக்களவை தேர்தலில் முக்கிய பிரச்சனைகள் எவை என்பது குறித்து Lokniti CSDS ஆய்வு அமைப்பு மக்களிடம் கருத்து க்கணிப்பு நடத்தியது.

சி.எஸ்.டி.எஸ் சர்வே: மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக, இந்தியாவில் வாக்காளர்களின் முதன்மையான கவலைகள் விலைவாசி உயர்வு மற்றும் வேலையில்லாத் திண்டாட்டம், ஊழல் ஆகியவை என்பது, வளர்ச்சியடைந்து வரும் சமூகங்களின் ஆய்வு மையம் (CSDS) நடத்திய தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.
5 ஆண்டுகளில் ஊழல்: லோக் நிதி - சிஎஸ்டிஎஸ் நடத்திய கருத்துக்கணிப்பில் பதிலளித்தவர்களில் ஐம்பத்தைந்து சதவீதம் பேர் கடந்த ஐந்து ஆண்டுகளில் ஊழல் அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர். 25 சதவீதம் பேர், இந்த ஊழல்களில் மத்திய அரசுக்கும், 16 சதவீதம் பேர் மாநில அரசுகளும் காரணம் என்று கூறியுள்ளனர். மேலும், 56 சதவீதம் பேர் மத்திய - மாநில இரு அரசுகளும் ஊழலுக்கு காரணம் எனத் தெரிவித்துள்ளனர்.
கடந்த 5 ஆண்டுகளில் ஊழலை பொறுத்தவரை கிராமப்புற, நகர்ப்புற, மாநகர வாரியாக வாக்காளர்களின் கருத்துகளை பதிவு செய்துள்ளது CSDS. அதன்படி, கிராமப்புற வாக்காளர்களில், 55 சதவீதம் பேர் கடந்த 5 ஆண்டுகளில் ஊழல் அதிகரித்துள்ளதாகவும், 19 சதவீதம் பேர் ஊழல் குறைந்துள்ளதாகவும், 18 சதவீதம் பேர் ஊழலில் மாற்றமில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
ஊழல் அதிகரித்துவிட்டது: நகர்ப்புறங்களில் 53 சதவீதம் பேர் கடந்த 5 ஆண்டுகளில் ஊழல் அதிகரித்துள்ளதாகவும், 19 சதவீதம் பேர் ஊழல் குறைந்துள்ளதாகவும், 23 சதவீதம் பேர் ஊழலில் மாற்றமில்லை என்றும் தெரிவித்துள்ளனர். பெரு நகரப் பகுதிகளில் 57 சதவீதம் பேர் கடந்த 5 ஆண்டுகளில் ஊழல் அதிகரித்துள்ளதாகவும், 19 சதவீதம் பேர் ஊழல் குறைந்துள்ளதாகவும், 16 சதவீதம் பேர் ஊழலில் மாற்றமில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

கடந்த 5 ஆண்டு காலத்தில் அதாவது பாஜக ஆட்சியில் இருந்து வரும் இந்த காலகட்டத்தில் ஊழல் அதிகரித்துள்ளது என பெரும்பான்மை மக்கள் தெரிவித்துள்ளனர். Lokniti CSDS கருத்துக்கணிப்பை குறிப்பிட்டு பாஜக ஆட்சியின் முடிவுக்கான கவுண்ட் டவுன் தொடங்கிவிட்டது என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஸ்டாலின் விமர்சனம்: இந்த கருத்துக்கணிப்பில் இருந்தே இந்த பாஜக ஆட்சியின் முடிவுக்கான Countdown ஆரம்பம் ஆகிவிட்டது. அதிகரித்துவிட்ட ஊழல், கார்ப்பரேட்டுகளிடமே மீண்டும் மீண்டும் குவியும் செல்வம், தொடரும் பாகுபாடுகள் என மக்களின் அன்றாட வாழ்வாதாரப் பிரச்சனைகளைத் தீர்ப்பதில், பத்தாண்டுகால பாஜக ஆட்சி படுதோல்வி அடைந்துவிட்டதை மக்கள் உணரத் தொடங்கி விட்டார்கள். 'சிலரைச் சில காலம் ஏமாற்றலாம்; எல்லோரையும் எப்போதும் ஏமாற்ற முடியாது" என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications