காஸ்ட்லி ஓட்டலில் பியூஷ் கோயல் ஹைடெக் பிளான்! எதிர்தரப்பு 60 லட்சம் செலவு! ஊட்டி பாஜக மாஸ்டர் பிளான்
சென்னை: மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் ஊட்டியில் உள்ள காஸ்ட்லி ஓட்டலில் நடத்திய ஹைடெக் மீட்டிங் மற்றும் எதிர்தரப்பு செய்யும் ரூ. 60 லட்சம் தேர்தல் செலவு குறித்த விவரங்கள்தான், நீலகிரி அரசியலில் பரபரப்பை தந்து கொண்டிருக்கிறது. பாஜக வேட்பாளர் போஜராஜன் வெற்றிக்காக வகுக்கப்பட்ட மாஸ்டர் பிளான், பறக்கும் படை நடத்திய அதிரடி சோதனை போன்றவற்றின் பின்னணி என்ன? ஊட்டி தேர்தல் களத்தில் நிலவும் அரசியல் டென்ஷன் என்னென்ன? இவைகளை நாம் இங்கே சுருக்கமாக பார்க்கலாம்.
திமுகவுக்கு இணையாக தேர்தல் செலவுகளை எதிர்கொள்ள முடியாமல் பாஜக வேட்பாளர்கள் திணறுவதாகவும், இதற்காக கட்சி நிதியுதவியை எதிர்பார்த்தபடி உள்ளதாகவும் கடந்த வாரம் முன்னணி நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது..

பாஜக வேட்பாளர் செலவு
அதாவது, மொத்தம் உள்ள 27 தொகுதிகளில் 18 இடங்களில் திமுகவுடன் பாஜக நேரடியாக மோதுகிறது.. திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள், ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் தலா 20,000 ரூபாய் வீதம், ஒரு தொகுதிக்கு சராசரியாக உள்ள 300 வாக்குச்சாவடிகளுக்கு நாளொன்றுக்கு 60 லட்சம் ரூபாய் வரை செலவு செய்கின்றனர்.
இதே ஸ்பீடில், அதிமுக வேட்பாளர்களும் களத்தில் பணத்தை செலவிட்டு வருகின்றனர்.. ஆனால், பாஜக தரப்பில் போட்டியிடும் வேட்பாளர்களில் 12 பேர் மட்டுமே திமுகவுக்கு இணையான பொருளாதார பலம் கொண்டவர்களாக இருக்கிறார்களாம்.. மற்ற வேட்பாளர்கள் கட்சி மேலிடத்தின் நிதியுதவியை எதிர்பார்த்து காத்திருக்கிறார்களாம்..
திமுகவுக்கு இணையாக செலவு
குறிப்பாக அறந்தாங்கி, ராசிபுரம், கந்தர்வக்கோட்டை, திருவாரூர் மற்றும் நாகர்கோவில் உள்ளிட்ட தொகுதிகளில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் வசதி படைத்தவர்களாக இருந்தாலும், எதிர்தரப்பு செய்யும் அதிரடி செலவுகளுக்கு ஈடுகொடுக்க முடியாமல் தடுமாறுவதாகவும் கூறப்படுகிறது.
தொண்டர்களுக்கான உணவு மற்றும் போக்குவரத்து செலவுக்கே தினமும் குறைந்தது 20 லட்சம் ரூபாய் வரை தேவைப்படுகிறது.. தேர்தல் நெருங்கும் வேளையில் திமுகவினர் பணத்தை தண்ணீராக செலவழிக்கத் திட்டமிட்டுள்ளதால், பூத் கமிட்டி பொறுப்பாளர்களை திருப்திப்படுத்தினால் மட்டுமே 100 சதவீத வெற்றியை உறுதி செய்ய முடியும் என பாஜகக வட்டாரங்கள் கருதுகின்றன..
அதனால் கட்சி மேலிடம் உடனடியாக நிதியுதவி வழங்க வேண்டும் என்றும், அந்த நிதி முறையாகச் சென்றடைகிறதா என்பதைக் கண்காணிக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்த வண்ணம் உள்ளது.
ஊட்டி பியூஷ் கோயல்
இப்படிப்பட்ட சூழலில், ஊட்டியில் நடந்துள்ள பாஜக பிரச்சார சம்பவம், மலை மாவட்ட மக்களின் கவனத்தை பெற்று வருகிறது... நீலகிரி மாவட்டம் ஊட்டி சட்டமன்றத் தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் போஜராஜன் போட்டியிடுகிறார்.. இவருக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பதற்காக உள்ளூர் நிர்வாகிகளைக் காட்டிலும், டெல்லியில் இருந்து மத்திய அமைச்சர்கள் மற்றும் பாஜக முக்கிய நிர்வாகிகள் தொடர்ச்சியாக வந்து செல்கிறார்கள்.
அந்த வகையில், தேர்தல் பிரச்சாரத்திற்காக மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் நேற்று ஊட்டிக்கு வருகை தந்தார்.. அவர் வந்திறங்கிய ஹெலிகாப்டரை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வழிமறித்து தீவிர சோதனைக்கு உட்படுத்தினார்கள்.
ஸ்டார் ஓட்டல் + ஹைடெக் டீம்
இந்த சோதனையில் பணம் அல்லது பரிசுப் பொருட்கள் என எதுவும் சிக்கவில்லை என்றாலும், அமைச்சரின் வருகையின் போதே நடத்தப்பட்ட இந்த அதிரடி ஆய்வு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டது என்றே சொல்லலாம்.
ஹெலிகாப்டர் சோதனைக்கு பிறகு அமைச்சர் பியூஸ் கோயல் தொகுதி முழுவதும் சென்று பொதுமக்களைச் சந்தித்து வாக்கு சேகரிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், அவர் ஊட்டியில் உள்ள ஒரு ஸ்டார் ஓட்டலில் தங்கி அங்கேயே கூட்டங்களை நடத்தினார்.. இந்த கூட்டத்திற்கு சாதாரண பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லையாம்.. நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் கன்னடம் பேசும் உயர்தட்டு மக்கள் மற்றும் அப்பகுதியில் உள்ள பல்வேறு சமுதாயத்தைச் சேர்ந்த செல்வாக்குமிக்க சங்கங்களின் நிர்வாகிகளை மட்டுமே அவர் நேரில் சந்தித்து போஜராஜனுக்கு ஆதரவு கோரினாராம்..
ஊட்டி பாஜக மாஸ்டர் பிளான்
சாதாரண தொண்டர்களைத் தவிர்த்துவிட்டு ஒரு குறிப்பிட்ட மேல்தட்டு வர்க்கத்தினரை மட்டும் சந்தித்த விவகாரம்தான் தற்போது விவாதத்திற்கு உள்ளாகியிருக்கிறது.
அதுமட்டுமல்ல, சில நவீன ஹைடெக் சங்கங்களைச் சந்தித்து அவர்களிடம் வேட்பாளர் போஜராஜனுக்கு ஆதரவாக பேசிய பியூஷ் கோயல், கூட்டணி கட்சிகளையோ அல்லது சாமானிய மக்களையோ நேரில் சந்திக்கத் தவறிவிட்டதாகவும் சலசலப்பு கிளம்பி உள்ளது.
தேர்தல் களத்தில் கூட்டணி கட்சிகளின் ஒத்துழைப்பும், பொதுமக்களுடனான நேரடித் தொடர்பும் மிக முக்கியமாகக் கருதப்படும் நிலையில், எளிய மக்களை சந்திக்காமல் அவர் புறப்பட்டுச் சென்றது உள்ளூர் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.. தொகுதி முழுவதும் சூறாவளிப் பிரச்சாரம் மேற்கொள்ளாமல் நட்சத்திர ஓட்டல் சந்திப்புகளுடன் தனது பயணத்தை அமைச்சர் முடித்துக்கொண்டது தேர்தல் களத்தில் முணுமுணுப்பையும் உருவாக்கி உள்ளதாம்....!!













Click it and Unblock the Notifications