தமிழர்கள் பற்றி அவதூறு.. சிக்கலில் மத்திய அமைச்சர் ஷோபா கரந்தலாஜே! பொது மன்னிப்புதான் தீர்வு-கோர்ட்
சென்னை: பெங்களூரில் ராமேஸ்வரம் கஃபேயில் வெடிகுண்டு வெடித்த சம்பவத்திற்கு தமிழர்கள்தான் காரணம் என்று மத்திய இணையமைச்சர் ஷோபா கரந்த்லாஜே கூறியிருந்தார். இதற்காக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்ய அவர் கோரியிருந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்து தனது கருத்துக்கு மன்னிப்பு கோர வேண்டும் என்று நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
பெங்களூரு ஒயிட்ஃபீல்டு அருகே உள்ள புரூக்ஃபீல்டில் உள்ள பிரபல ராமேஸ்வரம் கஃபே ஓட்டலில் கடந்த மார்ச் 1ம் தேதி பட்டப்பகலில் குண்டு வெடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதில் 10 பேர் வரை படுகாயமடைந்தனர். எதற்காக குண்டு வெடிக்கவைக்கப்பட்டது? தீவிரவாதிகளின் செயலா? வெளிநாட்டு சதியா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டது.

முதலில் பெங்களூர் போலீஸார் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து 8 தனிப்படைகள் அமைத்து விசாரணையை தொடங்கியது. ஆனால், பின்னர் என்ஐஏ வசம் விசாரணை சென்றது. தீவிர தேடுதல் வேட்டைக்கு பிறகு ஒருவர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், இந்த சம்பவத்தை குறிப்பிட்டு குண்டுவெடிப்பில் தமிழர்களுக்கு தொடர்பு இருப்பதாக மத்திய இணையமைச்சர் ஷோபா கரந்தலாஜே பேசியிருந்தார். இது சர்ச்சையை கிளப்பியிருந்தது.
அதாவது, "தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் வந்து எங்கள் ஓட்டலில் வெடிகுண்டுகளை வைக்கிறார்கள். எங்கள் மாநிலம் மீது தாக்குதல் நடத்துகின்றனர். அவர்கள் மீது கர்நாடகா மாநில அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை இன்னும் சிலர் வேறு இடங்களில் இருந்து வந்து 'பாகிஸ்தான் ஜிந்தாபாத்' என்று கோஷம் போடுகிறார்கள். அவர்களை தடுப்பது இல்லை. மேலும் மாணவர்கள் மீது சிலர் ஆசிட் வீசுகிறார்கள், அப்படி சர்ச்சைக்குரிய விஷயங்களை செய்யபவர்கள் மீது கர்நாடகா மாநில அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை" என்று பேசியிருந்தார்.
இது பெரும் விவாதங்களை கிளப்பியிருந்தது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் மத்திய இணையமைச்சரின் கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். விஷயம் பூதாகரமாக வெடிப்பதை உணர்ந்த ஷோபா கரந்த்லாஜே, தனது பேச்சு குறித்து x தளத்தில் மன்னிப்பு கோரியிருந்தார்.
ஆனால், இவரது கருத்துக்கள் இரு மாநிலத்திற்கு இடையே பகையை வளர்ப்பதை போல இருப்பதாக கூறி தமிழ்நாடு சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளக்கூடாது என்றும், உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும் ஷோபா கரந்த்லாஜே தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.
இந்த வழக்கு நேற்று நீதிபதி ஜி ஜெயச்சந்திரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு தரப்பில் ஆஜராகியிருந்த அட்வகேட் ஜெனரல் பி.எஸ். ராமன், "ஷோபா கரந்த்லாஜே செய்தியாளர்களை கூட்டி, அதில் தனது கருத்து குறித்து மன்னிப்பு கோர வேண்டும். அப்படி செய்தால் அவர் மீது எப்ஃஐஆர் பதிவு செய்யப்படாது" என்று கூறியிருந்தார்.
அதேபோல மன்னிப்பு கேட்பது தொடர்பான விவரங்களையும் அவர் நீதிமன்றத்தில் அளித்திருந்தார். அதில், "கடந்த மார்ச் மாதம் 19ம் தேதி அன்று பெங்களூரில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து பத்திரிக்கையாளர் சந்திப்பில் தமிழக மக்களைப் பற்றி நான் கூறிய கருத்துகளுக்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். அவை பொருத்தமற்றவை. குறிப்பாக தமிழ்நாட்டு மக்களின் பன்முகத்தன்மை மற்றும் செழுமைக்கான எனது மரியாதைக்கு முரணானவை என்பதை நான் புரிந்துகொள்கிறேன்.
எனது வார்த்தைகளின் தாக்கத்தைப் பற்றி சிந்திக்க நான் நேரத்தை எடுத்துக்கொண்டேன், மேலும் தமிழ்நாட்டு மக்களுக்கு ஏதேனும் காயம் ஏற்பட்டிருந்தால் அவர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இதுபோன்ற பேச்சுகள் மீண்டும் வராமல் பார்த்துக்கொள்கிறேன்" என்று இந்த மன்னிப்பு கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதனை ஷோபா பத்திரிகையாளர்கள் முன்பு கூற வேண்டும்.
ஷோபா கரந்த்லாஜேவின் வழக்கறிஞரிடம் மன்னிப்பு கடிதத்தின் நகலைப் பெறுமாறு கூறிய நீதிபதி, ஷோபா கரந்த்லாஜே மன்னிப்பு கேட்க சம்மதிப்பாரா என்பதை அறிய ஆகஸ்ட் 16 வரை அவகாசம் வழங்கினார்.
இதனையடுத்து வாதாடிய ஷோபா கரந்த்லாஜே வழக்கறிஞர், "அமைச்சர் ஷோப ஏற்கெனவே இது தொடர்பாக x தளத்தில் மன்னிப்பு கோரியிருக்கிறார். எனவே பொது மன்னிப்பு தேவையற்றது. வேண்டுமெனில் நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்கிறோம்" என்று கூறினார். ஆனால் நீதிபதி இதனை ஏற்க மறுத்துவிட்டார்.
"இது மக்களின் உணர்வுகளை கையாள்வதோடு மட்டுமல்லாமல் அரசியல் தாக்கங்களையும் கொண்ட ஒரு தீவிரமான பிரச்சினை. எனவே, பத்திரிகையாளர் சந்திப்பின் மூலம் மன்னிப்பு கேட்பதுதான் சரியாக இருக்கும்" என்றும் நீதிபதி கூறியுள்ளார். இதனையடுத்து வழக்கு விசாரணை 16ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications