நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிரான புத்தகம்.. தமிழக அரசின் அறிக்கையை ஏற்று வழக்கு முடித்து வைப்பு
சென்னை: நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் குறித்து அவதூறு பரப்பும் புத்தகம் வெளிவராத வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தாக்கல் செய்த அறிக்கையை ஏற்று, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இன்று முடித்து வைக்கப்பட்டது.
திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தூணில் விளக்கு ஏற்ற வேண்டும் என்று உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தீர்ப்பளித்தார். மேலும் திருப்பரங்குன்றம் விவகாரத்தை சுட்டிக் காட்டி, உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிரான புத்தகம் ஒன்று சென்னை 49-வது புத்தகக் கண்காட்சியில் விற்பனைக்கு வருவதாக அறிவிப்பு வெளியானது.

இதையடுத்து, நீதிபதிக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலும், அவதூறு செய்யும் வகையிலும் உள்ள அந்த புத்தகத்தின் விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும் எனவும், புத்தகத்தை வெளியிட்ட கீழைகாற்று பதிப்பகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வேலூரை சேர்ந்த நவீன் பிரசாத் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.
இந்த மனு தொடர்பான விசாரணை தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், புத்தகத்தை வெளியிடத் தடை விதித்து, நீதிபதி குறித்து அவதூறு பரப்பும் புத்தகங்களை பறிமுதல் செய்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.
கீழைக்காற்று பதிப்பகம் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும், புத்தகம் விற்பனைக்கு வரவில்லை என்பதை உறுதி செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்டு, விசாரணையை 3 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம் ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி அருள்முருகன் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், நீதிமன்ற உத்தரவின்படி, ஜனவரி 7 ஆம் தேதி பிற்பகல் புத்தகக் கண்காட்சியில் விசாரணை செய்யப்பட்டது. கடையில் ஆய்வு செய்த போது, குறிப்பிட்ட புத்தகங்கள் அங்கே இல்லை.
கீழைக்காற்று பதிப்பகத்தாரிடம் விசாரணை செய்ததில், புத்தகத்தை விற்பனை செய்யக் கூடாது என தென்னிந்தியப் புத்தக பதிப்பாளர் மற்றும் விற்பனையாளர் சங்கம் தெரிவித்ததால், புத்தகத்தை விற்பனை செய்யவில்லை. புத்தகம் தொடர்பாக ஃபேஸ்புக்கில் வெளியிடப்பட்ட பதிவுகள் உடனடியாக நீக்கப்பட்டன. புத்தகங்கள் விற்பனைக்கு வராத வகையில் அனைத்து நடவடிக்கைகளையும் தீவிரமாக எடுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, தமிழக அரசின் அறிக்கையை ஏற்ற நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனர்.












Click it and Unblock the Notifications