தமிழகத்தில் தொடர்ந்து ஆட்டம் போடும் கொரோனா.. ஒரே நாளில் 1,243 பேர் பாதிப்பு!
சென்னை: தமிழகத்தில் 3 மாதங்களுக்கு பிறகு கொரோனா தொற்று மீண்டும் ஆட்டம் போட்டு வருகிறது.. இன்று ஒரே நாளில் மட்டும் 1,243 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனாவில் இருந்து மேலும் 634 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 8,45,812 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
தமிழகத்தில் ஓரளவு அடங்கி இருந்த கொரோனா தற்போது மீண்டும் ஆட்டம் போட்டு வருகிறது. சில வாரங்களுக்கு முன்பு 500-க்கு கீழ் இருந்த கொரோனா பாதிப்பு தற்போது 1,000-ஐ தாண்டியுள்ளது.
அதிகரிக்கும் கொரோனா
சென்னையிலும் தொடர்ந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது. இது தவிர கோவை, செங்கல்பட்டு, திருவள்ளூர் பகுதியிலும் பாதிப்பு அதிகரித்து வருகிறது.இந்த நிலையில் தமிழகம் முழுவதும் மேலும் 1,243 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் 28-ம் தேதிக்கு பிறகு தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் தொடர்ந்து 2-வது நாளாக 1000-ஐ கடந்துள்ளது மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
8 பேர் உயிரிழப்பு
இதனால் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 8,65,693 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவில் இருந்து மேலும் 634 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 8,45,812 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.கொரோனாவுக்கு மேலும் 8 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 12,590 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் மேலும் 73,165 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை 1,87,05,851 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
74,954 பேருக்கு பரிசோதனை
இன்று மட்டும் 74,954 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை 1,83,86,249 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. சுமார் 7,291 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
செங்கல்பட்டில் அதிகரிக்கும் பாதிப்பு
சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டில் 134 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கோவையில் 103 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கோவையிலும், செங்கல்பட்டிலும் தொடர்ந்து 2-வது நாளாக பாதிப்பு 100-ஐ கடந்துள்ளது. திருவள்ளூரில் 78 பேருக்கும், தஞ்சாவூரில் 85 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.