தென்மாநிலங்களில் வேகம் எடுக்கும் AY.4.2 கொரோனா.. 3வது அலையில் சிக்குமா தமிழ்நாடு? தப்புவது எப்படி?
சென்னை: தென் மாநிலங்களில் AY.4.2 வகை உருமாறிய கொரோனா வைரஸ் கேஸ்கள் அதிகரித்து வருகிறது. தென்மாநிலங்களில் திடீரென இந்த புதிய வகை கொரோனா பரவுவது, தமிழ்நாட்டிற்கு ஒரு எச்சரிக்கை மணியாக பார்க்கப்படுகிறது.
Recommended Video
உலகம் முழுக்க பல்வேறு நாடுகளில் AY.4.2 வகை உருமாறிய கொரோனா வைரஸ் வேகம் எடுக்க தொடங்கி உள்ளது. இந்த AY.4.2 வகை உருமாறிய கொரோனா வைரஸ் எவ்வளவு ஆபத்தானது என்று தெரியவில்லை என்றாலும் இது வேகமாக பரவ கூடியது என்று மட்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இப்போதுதான் யு.கேவில் கண்டறியப்பட்டது போல இருந்தாலும் தற்போது அமெரிக்கா, இந்தியா தொடங்கி பல்வேறு நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் டெல்டா வகை வைரஸ்தான் இரண்டாம் அலையை ஏற்படுத்தியது.

டெல்டா
டெல்டா வகை வைரஸ் மிக வேகமாக பரவிய காரணத்தால் இரண்டாம் அலை இந்தியாவில் ஏற்பட்டது. இந்த நிலையில்தான் டெல்டாவின் கிளை வைரசான AY.4.2 வகை உருமாறிய கொரோனா வைரஸ் தற்போது பரவ தொடங்கி உள்ளது. டெல்டா வகை வைரஸ் அளவிற்கு இது ஆபத்தானதா என்று தெரியவில்லை. ஆனாலும் டெல்டா எப்படி இரண்டாம் அலையை ஏற்படுத்தியதோ அதேபோல் AY.4.2 வகை உருமாறிய கொரோனா வைரஸ் மூன்றாம் அலையை ஏற்படுத்துமா என்ற அச்சம் எழுந்துள்ளது.

தென் மாநிலங்கள்
முக்கியமாக தென் மாநிலங்களில் AY.4.2 வகை உருமாறிய கொரோனா வைரஸ் கேஸ்கள் அதிகம் பதிவாகி வருகிறது. ஆந்திர பிரதேசத்தில் 7 பேருக்கு AY.4.2 வகை உருமாறிய கொரோனா வைரஸ் ஏற்பட்டுள்ளது. கர்நாடகாவில் 2 உறுதிப்படுத்தப்பட்ட கேஸ்கள், 5 சந்தேக கேஸ்கள் என்று 7 பேருக்கு ஏற்பட்டுள்ளது. கேரளாவில் நான்கு பேருக்கு AY.4.2 வகை உருமாறிய கொரோனா வைரஸ் ஏற்பட்டுள்ளது. தெலுங்கானாவில் ஒருவருக்கு AY.4.2 வகை உருமாறிய கொரோனா வைரஸ் ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாடு
ஆனால் தமிழ்நாட்டில் இதுவரை AY.4.2 வகை உருமாறிய கொரோனா வைரஸ் பதிவாகவில்லை. தமிழ்நாட்டில் இதுவரை AY.4.2 வகை உருமாறிய கொரோனா வைரஸ் கேஸ்கள் எங்கும் அதிகாரபூர்வமாக பதிவாகவில்லை. இதனால்தான் தமிழ்நாட்டில் இதுவரை கொரோனா கேஸ்கள் உயரவில்லை. கேரளாவில் தினசரி கேஸ்கள் 7500க்கும் அதிகமாக பதிவாகி வரும் நிலையில் தமிழ்நாட்டில் 1061 பேருக்குத்தான் நேற்று பாதிப்பு ஏற்பட்டது.

பாதிப்பு இல்லை
இது தொடர்பாக தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அளித்த பேட்டியில், கொரோனா தமிழ்நாட்டில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் AY.4.2 வகை உருமாறிய கொரோனா வைரஸ் கேஸ்கள் பதிவாகவில்லை. மக்கள் விழா காலங்களில் கொரோனா கட்டுப்பாடுகளை மதிக்க வேண்டும், என்று குறிப்பிட்டு இருக்கிறார். இதனால் தமிழ்நாட்டிற்கு இப்போதைக்கு பாதிப்பு இல்லை. ஆனாலும் AY.4.2 வகை உருமாறிய கொரோனா வைரஸ் அண்டை மாநிலங்களில் பரவி உள்ளதால் தமிழ்நாட்டிலும் பரவும் வாய்ப்புகள் உள்ளது.

தடுப்பது எப்படி?
இந்த நிலையில் AY.4.2 வகை உருமாறிய கொரோனா வைரஸ் பரவாமல் இருக்கவும், 3ம் அலை ஏற்படாமல் இருக்கவும் தமிழ்நாடு மக்கள் பின்வரும் விதிகளை கடைபிடிக்க வேண்டும். இரண்டாம் டோஸ் எடுக்காமல் விட்டவர்களுக்கு அதிகம் கொரோனா ஏற்படுவதாக சுகாதாரத்துறை கூறியுள்ளது. இதனால் முதல் டோஸ் எடுத்தவர்கள் தங்கள் தேதிகளில் சரியாக இரண்டாம் டோஸ் எடுக்க வேண்டும். ஒரு டோஸ் போதும் என்று இருந்துவிட கூடாது.

இரண்டாம் டோஸ்
அதேபோல் முதல் டோஸ் எடுக்காதவர்களும் உடனடியாக வேக்சின் போட வேண்டும். இன்னொரு பக்கம் வேக்சின் போட்டுவிட்டோம் என்று வெளியே சுற்றாமல், வேக்சின் போட்டாலும் உருமாறிய கொரோனா தாக்க வாய்ப்புள்ளது என்பதை உணர்ந்து கொண்டு பாதுகாப்பாக இருக்க வேண்டும். அவசியமான பயணங்களை மட்டுமே மேற்கொள்ள வேண்டும். முக்கியமாக இது பண்டிகை காலம். இப்போது பலர் வெளியே செல்வார்கள்.

கூட்டம்
இப்படிப்பட்ட நேரங்களில் கூட்டமான இடங்களை தவிர்க்க வேண்டும். முக்கியமாக துணி கடைகள், நகை கடைகளை தவிர்க்க வேண்டும். குழந்தைகள், வயதானவர்களை வெளியே அழைத்துச் செல்வதை தவிர்க்க வேண்டும். கட்டாயமாக ஒரு மாஸ்க்.. அல்லது தேவைப்பட்டால் இரண்டு மாஸ்க் அணிய வேண்டும். மக்கள் முடிந்த அளவு கொரோன தடுப்பு விதிகளை பின்பற்றினால் மட்டுமே 3ம் அலையில் இருந்தும் AY.4.2 வகை உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்தும் தப்பிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications