தமிழகத்தில் உருமாறிய கொரோனா பரவல்...முகக்கவசம் அணிவதை தவிர வேறு வழியில்லை - டாக்டர் ராதாகிருஷ்ணன்
இந்திய அளவில் 3 சதவிகித கொரோனா பாதிப்பு தமிழகத்தில் ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
சென்னை: கொரோனாவில் இருந்து தப்புவதற்கு முகக்கவசம் அணிவதை தவிர வேறுவழியில்லை என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இந்திய அளவில் 3 சதவிகித கொரோனா பாதிப்பு தமிழகத்தில் ஏற்பட்டுள்ளதாகவும் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தொற்று ஏறுமுகமாக உள்ளதாகவும் டாக்டர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
Recommended Video

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதித்து 5500 பேரை தாண்டியுள்ளது. 35000 பேர் வரை கொரோனாவிற்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பரவலை தடுக்கும் வகையில் இன்று முதல் தமிழகத்தில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

சென்னை திருவல்லிக்கேணியில் ஏற்கனவே செயல்பட்டு வந்த விக்டோரியா மாணவர் விடுதி கொரோனா தனிமைப்படுத்தும் மையமாக மாற்றப்பட்டு வருகிறது. இந்த மையத்தை ஆய்வு செய்தபின் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், லேசான மற்றும் அறிகுறி இல்லாதவர்களுக்கு விக்டோரியா கோவிட் கேர் மையத்தில் வைத்து சிகிச்சை அளிக்கப்படும் என்று கூறினார்.
தமிழ்நாட்டில் 11 பேருக்கு பிரிட்டன் கொரோனாவும், ஒருவருக்கு தென்னாப்பிரிக்க கொரோனாவும் கண்டறியப்பட்டுள்ளது. இந்திய பாதிப்பில் 3 சதவிகித கொரோனா பாதிப்பு தமிழகத்தில் ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். கொரோனாவில் இருந்து மீள்வதற்கு முகக்கவசம் அணிவதை தவிர வேறு வழியில்லை என்று கூறிய ராதாகிருஷ்ணன், பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்கவில்லை என்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கும் நிலைக்கு தள்ளப்படுவோம் என்றார்.
நுண்கிருமி எப்படி பரவுகிறது என்பதை அறிந்து மக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும். கொரோனா சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரிக்கிறது. கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை முடித்து இரண்டாவது டோஸ் போட்டுக்கொள்ளும்போது எதிர்ப்பு சக்தி 70% முதல் 80% அதிகரிக்கும் என்றார்.
தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு இல்லை. தமிழ்நாட்டில் 45 வயதிற்கு மேற்பட்டோர் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் எண்ணிக்கை திருப்திகரமாக இல்லை என்று கூறிய ராதாகிருஷ்ணன், 60 வயதுக்கு மேற்பட்டவர்களிடம் இருந்த ஆர்வம், 45 வயதுக்கு மேற்பட்டவர்களிடம் இல்லை. தடுப்பூசி போட்டவர்களில் ஒரு சிலருக்கு தொற்று மீண்டும் வருகிறது. ஆனால் அது தீவிரமாக இருப்பதில்லை என்றும் கூறினார்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுர குடிநீர் மற்றும் சித்தா கேர் மையத்தை திரும்ப தொடங்க உள்ளதாகவும் டாக்டர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications