13 மாவட்டங்களில் நிலைமை சரியில்லை.. எச்சரிக்கும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்
சென்னை: 13 மாவட்டங்களில் கொரோனா தொற்று சரியில்லாமல் ஏற்றத் தாழ்வுகள் உள்ளது. அந்த மாவட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். வரும் நாட்களில் பல்வேறு மதப் பண்டிகைகள் வருவதால் மக்கள் அடுத்த பத்து நாட்களுக்கு ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்" என்றும் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
Recommended Video
சென்னை நந்தனம் அறிவியல் மற்றும் கலை கல்லூரியில் கல்லூரி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாமினை அமைச்சர் பொன்முடி மற்றும் மா சுப்பிரமணியன் தொடங்கி வைத்தனர்.
அதற்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேசியதாவது : "கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தமிழக அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.

கேரளா எல்லை
பிற மாநிலங்களில் கொரோனா அதிகரித்து வருகிறது அதையும் கண்காணித்து வருகிறோம். கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநில எல்லையில் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த உள்ளோம்.

பள்ளிகள்
தமிழகத்தில் இதுவரை மொத்தம் 3,06,74,681 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தளர்வுகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் கல்லூரி பள்ளிகள் திறக்கப்படுவதால் மக்கள் அதிகம் கூடும் பகுதிகள் உள்ளிட்ட இடங்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். மாநகராட்சி மார்க்கெட் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தடுப்பூசி முகாம் நடத்த கோரிக்கை வைத்தார் அதை செயல்படுத்தி வருகிறோம்.

13 மாவட்டங்கள்
மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தொடர்ந்து கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மக்கள் கூடும் விழாக்களில் random sample எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து 13 மாவட்டங்களில் கொரோனா தொற்று சரியில்லாமல் ஏற்றத் தாழ்வுகள் உள்ளது. அந்த மாவட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.

பரிசோதனை முடிவுகள்
தற்போது கொரோனா பாதிக்கப்பட்டால் என்ன மாதிரியான கொரோனா பாதிக்கப்பட்டுள்ளது என்பதை கண்டறிவதற்காக பரிசோதனை மாதிரிகளை பெங்களூரு மற்றும் ஹைதராபாத் போன்ற நகரங்களுக்கு அனுப்பி வைக்கிறோம். அப்படி அனுப்பி வைக்கப்பட்ட 2693 முடிவுகள் தற்போது வந்துள்ளது. 2150 டெல்டா வேரியட் என முடிவுகள் வந்துள்ளது. அதில் 12 டெல்டா பிளஸ், மீதம் உள்ளது டெல்டா என தெரியவந்துள்ளது. தமிழகத்தில் 80% டெல்டாவில் பாதிக்கப்படுகின்றனர். அண்மையில் கொடுத்த 222 கொடுத்த பரிசோதனைகளும் டெல்டா என தெரியவந்துள்ளது. Genome Lab ( கொரோனா மரபியல் ஆய்வு மையம்) சென்னையில் விரைவில் அமைக்கப்பட உள்ளது.

மத்திய அரசு
அடுத்த மூன்று நாட்களில் சோதனை முறையில் கொரோனா மரபியல் ஆய்வு மையம் செயல்பட உள்ளது. ஒரு வார காலம் இந்த சோதனையானது நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்திற்கு ஒதுக்கப்படும் தடுப்பூசிகள் இருப்பு இல்லாது போடப்பட்டு வருகிறது. கூடுதலான தடுப்பூசி ஒதுக்கினால் மட்டுமே தேசிய சராசரிக்கு இணையான அளவில் தடுப்பூசி செலுத்த முடியும் என மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளோம். அவர்களும் பரிசீலிப்பதாக தெரிவித்தனர்.

மதப் பண்டிகைகள்
கல்லூரி முதலாண்டு பயிலும் மாணவர்கள் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு தடுப்பு ஊசி செலுத்துவதற்கு மத்திய அரசு அனுமதி அளித்தால் தொடர்ந்து அவர்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்படும். கேரளா மற்றும் மற்ற மாநிலங்களில் இருந்து தமிழகம் வரும் அனைத்து மாணவர்களுக்கும் ஆர்டிபிசிஆர் பரிசோதனை கட்டாயம் செய்யப்படுகிறது. வரும் நாட்களில் பல்வேறு மதப் பண்டிகைகள் வருவதால் மக்கள் அடுத்த பத்து நாட்களுக்கு ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்" என தெரிவித்தார்.











Click it and Unblock the Notifications