தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை.. திமுகவை விடுங்க.. முதல் நாளிலேயே தவெக அரசை விமர்சித்த சிபிஐ!
சென்னை: முதலமைச்சராக விஜய் பதவியேற்ற விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக இசைக்கப்பட்டதற்கு திமுக மட்டுமல்லாமல், தவெக ஆட்சியமைக்க ஆதரவு அளித்துள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் கண்டனம் தெரிவித்துள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. பெரும்பான்மை இல்லாத காரணத்தால் விஜய் ஆட்சியமைக்க முடியாத சூழல் நிலவியது. காங்கிரஸ் கட்சி தவெகவுக்கு ஆதரவளித்து கூட்டணியில் இணைந்தது.

விஜய் பதவியேற்பு
அதைத்தொடர்ந்து, விஜய் ஆட்சி அமைக்க திமுக கூட்டணியில் இப்போதும் நீடிக்கும் சிபிஐ, சிபிஎம், விசிக மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகளின் 8 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு அளித்துள்ளனர். இதனையடுத்து ஆட்சி அமைக்க ஆளுநர் அர்லேகர் நேற்று விஜய்க்கு அழைப்பு விடுத்தார்.
இதையடுத்து இன்று காலை நேரு உள் விளையாட்டரங்கத்தில் விஜய் பதவி ஏற்பு விழா தொடங்கியது. பதவியேற்பு விழாவில் முதலில் வந்தே மாதரம் பாடலும், இரண்டாவதாக தேசிய கீதமும் பாடப்பட்டது. மூன்றாவதாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. இதைத் தொடர்ந்து தமிழக முதல்வராக ஜோசப் விஜய் பதவி ஏற்றார். ஆளுநர் அர்லேகர் அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக
இந்த நிகழ்ச்சியில், பொதுவாக தமிழ்நாடு அரசு விழாக்களில் கடைப்பிடிக்கப்படும் வழக்கமான மரபு மாற்றப்பட்டிருப்பது அரசியல் வட்டாரங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. வழக்கமாக, தமிழ்நாட்டில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளில் தொடக்கத்தில் தமிழ்த் தாய் வாழ்த்து ஒலிக்கப்படும். நிகழ்ச்சி இறுதியில் தேசிய கீதம் இசைக்கப்படுவது மரபாக இருந்து வருகிறது.
ஆனால், இன்றைய பதவியேற்பு நிகழ்ச்சியில் முதலில் வந்தே மாதரம் பாடப்பட்டது. அதன் பின்னர் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக ஒலிக்கப்பட்டது. இதனால், தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் இசைக்கப்படும் மரபைப் பின்பற்றாமல் பின்னுக்குத் தள்ளப்பட்டது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இதுதான் நீங்கள் கூவிய மாற்றமா?
இதுதொடர்பாக திமுக ஐடி விங் தனது எக்ஸ் தள பக்கத்தில், "பாஜக ஆளும் மாநிலங்களில் கூட இந்த அவலநிலை இல்லை! மேற்கு வங்கத்தில் பாஜக அரியணை ஏறியபோது கூட அங்கு 'வந்தே மாதரம்' ஒலிக்கவில்லை. ஆனால், இங்கே 'மாற்றம்' என்று வேடமிட்டு வந்தவர்கள், வந்தே மாதரம், தேசிய கீதத்திற்குப் பிறகு, தமிழர்களின் உயிர்மூச்சான 'தமிழ்த்தாய் வாழ்த்தை' மூன்றாம் பட்சமாக நிறுத்தித் தமிழ்த்தாயின் முகத்தில் கரியைப் பூசியுள்ளனர்! மரபுகளைச் சிதைத்துத் தமிழை அவமதிப்பதுதான் நீங்கள் ஊரெல்லாம் கூவிய மாற்றமா?முதல் நாளிலேயே தமிழ்த்தாய்க்கு நேர்ந்த இந்த இழிவு, ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டிற்கும் நேர்ந்த அவமானம்!" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக இசைக்கப்பட்டதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. முதல்வர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் ஆட்சியமைக்க ஆதரவளித்துள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, முதல் நாளிலேயே விஜய் அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது கவனம் பெற்றுள்ளது.
சிபிஐ கடும் கண்டனம்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவில் தனிப் பெரும் கட்சியாக வந்த தமிழக வெற்றிக் கழகத்தை ஆட்சியமைக்க அழைக்காமல் ஆளுநர் இழுத்தடித்து வந்தார். குறுக்கு வழியில் ஆட்சியமைக்க பல்வேறு வழிகளில் நடந்த முயற்சிகளை முறியடிக்க, மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் வெற்றி பெற்ற, இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகிய கட்சிகள் கலந்தாலோசித்து வழங்கிய ஆதரவின் அடிப்படையில் இன்று (10.05.2026) தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி பொறுப்பை ஏற்றுக் கொண்டது. அரசின் முதலமைச்சர் மற்றும் அமைச்சரவை உறுப்பினர்கள் பதவி ஏற்பு விழாவும் நடைபெற்றது.
இந்த விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாம் நிலைக்கு தள்ளப்பட்டு, வந்தேமாதரம், நாட்டுப் பண் முதல் இரு நிலைகளுக்கு உயர்த்தப்பட்டிருக்கிறது. இது தமிழ்நாடு அரசு இதுவரை அரசு விழாக்களில் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தும், நிறைவில் தேசிய கீதமும் பாடுவது, நாட்டின் விடுதலைக்கு பிறகு இதுவரை கடைப்பிடித்து வரும் மரபாகும்.
"வந்தேமாதரம்" ஒரு குறிப்பிட்ட கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்டதும் ஒரு மதச்சார்புடையதுமான அப்பாடல் என்பதால் தேசிய கீதமாக இருக்க முடியாது என விடுதலை இயக்கக் காலத்திலேயே தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஆளுநர் மாளிகை உத்தரவுப்படி, தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்த பதவி ஏற்பு விழா நிகழ்ச்சி நிரலில் "வந்தேமாதரம்" பாடலுக்கு முதலிடம் வழங்கி, தமிழை மூன்றாம் நிலையில் வைத்தது மரபை மீறிய செயலாகும்.
இந்த தவறுக்கு காரணமானவர்கள் யார் என்பதை தமிழ்நாடு அரசு பொதுமக்களுக்கு விளக்க வேண்டும். தமிழக வெற்றிக் கழகம் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம் பெறுவதை உறுதி செய்ய வேண்டும். இந்தத் தவறு தொடருவதை அனுமதிக்கக் கூடாது. நாளை (11.05.2026) சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி ஏற்புக்காக கூடும் சட்டப்பேரவைக் கூட்டத்திலும், அனைத்து அரசு நிகழ்வுகள் விழாக்களிலும் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதையும், நிறைவாக நாட்டுப் பண் இசைப்பதையும் உறுதி செய்ய வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு, தமிழ்நாடு அரசின் முதலமைச்சரையும், தற்காலிக பேரவைத் தலைவரையும் கேட்டுக் கொள்கிறது." எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications