திருவாரூர் இடைத்தேர்தல்... திமுகவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு
சென்னை: திருவாரூர் இடைத்தேர்தலில் திமுகவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு அளிப்பதாக அக்கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.
திமுக வேட்பாளருக்கு மார்க்சிஸ்ட் கட்சி ஆதரவு என மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் திருப்பரங்குன்றம், திருவாரூர் உள்பட 20 தொகுதிகள் காலியாக இருக்கும் நிலையில் திருவாரூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் ஜனவரி 28 ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மறைவை அடுத்து, திருவாரூர் தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டது. இந்தநிலையில், வருகிற 28-ஆம் தேதி இடைத்தேர்தல் நடக்க உள்ள நிலையில், திமுகவுக்கு மதிமுக முழு ஆதரவு அளிக்கும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
அதே போல், திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமு.க.வை ஆதரிப்பது என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயற்குழு ஒரு மனதாக முடிவு செய்துள்ளதாக முத்தரசன் தெரிவித்துள்ளார்.