11 கோடி ரூபாய் வரி பாக்கி? "மேட்டரே வேற": வருமான வரித்துறை நோட்டீஸ் குறித்து CPI முத்தரசன் விளக்கம்!
சென்னை: 11 கோடி ரூபாய் வருமான வரி பாக்கி என வெளியாகி வரும் தகவல், தேர்தல் ஆதாயம் தேடும் குறுகிய பார்வை கொண்டது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் விமர்சித்துள்ளார். வரி பாக்கி என வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியது தொடர்பாக அவர் விளக்கம் அளித்துள்ளார்.
லோக்சபா தேர்தல் நாடு முழுவதும் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி, ஜூன் 1ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை ஒரே நாளில் ஜூன் 4ஆம் தேதி நடைபெற உள்ளது. லோக்சபா தேர்தலையொட்டி, அனைத்து அரசியல் கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்து, தீவிரமாக தேர்தல் பிரச்சார பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.

வருமான வரி பாக்கி என நோட்டீஸ்: இந்நிலையில், காங்கிரஸ் கட்சி வருமான வரி பாக்கி வைத்திருப்பதாக கூறி 1,823 கோடி ரூபாய் பணம் செலுத்த வேண்டுமென சமீபத்தில் வருமான வரித்துறை உத்தரவிட்டது. அந்த பரபரப்பு அடங்குவதற்குள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 11 கோடி ரூபாய் வருமான வரி பாக்கி வைத்திருப்பதாக நோட்டீஸ் அனுப்பியது வருமான வரித்துறை. இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், அதன் மாநில செயலாளர் முத்தரசன் விளக்கம் அளித்துள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி விளக்கம்: இதுதொடர்பாக முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு வருமான வரித்துறை ரூபாய் 11 கோடி வரி பாக்கி நோட்டீஸ் கொடுத்திருப்பதாக ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளது. இது தொடர்பாக கட்சி நண்பர்கள், பொதுமக்களிடம் கேள்வி எழுந்துள்ளது. வருமான வரித் துறைக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் வரிவிலக்கு தொடர்பான கடிதப் போக்குவரத்து இருந்து வருகிறது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இந்திய தேர்தல் ஆணையத்தில் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951 பிரிவு 29-ஏ ன்படி பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியாகும். இதன் மூலம் வருமான வரிச் சட்டம் 13ஏ பிரிவுப்படி வரிவிலக்கு பெறுவதற்கான சட்டப்பூர்வ உரிமை உள்ளது. இதனை ஏற்று வருமான வரித்துறை வரிவிலக்கு வழங்கியிருக்க வேண்டும். அப்படி வரிவிலக்கு கொடுக்கப்பட்டிருந்தால் கட்சிக்கு வரி பாக்கியும் இல்லை. அதன் மீது அபராதமும், அதற்கு வட்டி போட வேண்டிய அவசியமும் இல்லை. கட்சிக்கு வருமான வரி விலக்கு அளிக்க வேண்டும் என்ற முறையீடு, தீர்வு காணப்படாமல் நிலுவையில் இருக்கிறது.
தேர்தல் ஆதாயம்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில குழு, மாநில அலுவலக கட்டிடம் தொடர்பான கடன் தவணை, வாடகை வருமானம், இதற்கான ஜிஎஸ்டி வரி உள்ளிட்ட வரியினங்கள் அனைத்தையும் முறையாகவும் காலம் தவறாமலும் செலுத்தி வருகிறது. ஆனால் இதனை மறைத்து, வருமான வரித் துறையின் நோட்டீஸ் குறித்து பரப்பப்படும் செய்தி தேர்தல் ஆதாயம் தேடும் குறுகிய பார்வை கொண்டது. இதனை பொதுமக்களும் வாக்காளர்களும் தெளிவாக உணர்ந்து கொள்வார்கள். வருமான வரித்துறை நோட்டீஸ் தொடர்பாக கட்சியின் தணிக்கையாளர்கள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications