எடப்பாடியால் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆக முடியாது – முத்தரசன் காட்டம்
சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசனை விமர்சித்திருந்தார். இதற்கு பதிலளித்துள்ள முத்தரசன், எடப்பாடியால் ஒருபோதும் எம்ஜிஆர், ஜெயலலிதா போன்ற ஆளுமையாக ஆக முடியாது என்று கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் 2026 சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ளன. அரசியல் கட்சிகள் வியூகங்களுடன் அனல் பறக்க தொடங்கிவிட்டனர். அதிமுக சார்பில் மக்களைக் காப்போம். தமிழகத்தை மீட்போம் என்ற முழக்கத்துடன் அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 234 தொகுதிகளுக்கும் சுற்றுப் பயணம் செய்து வருகிறார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவையில் அவரின் சுற்றுப் பயணம் தொடங்கியது. கோவை வடவள்ளி பகுதியில் நேற்று பேசிய எடப்பாடி பழனிசாமி, "திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை கடுமையாக சாடினார். அப்போது எடப்பாடி பழனிசாமி, கம்யூனிஸ்ட் கட்சி கொஞ்சம் கொஞ்சமாக தேய்ந்து கொண்டிருக்கிறது. தமிழகத்தில் கம்யூனிஸ்ட் கட்சி இருக்கிறதா என்று முகவரியே தெரியாமல் இருக்கிறது.
இந்த கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் ஸ்டாலினுக்கு அடிமையாக இருக்கிறார். முத்தரசன் உங்கள் கட்சி போல எங்கள் கட்சியை நினைக்க வேண்டாம். உங்களது கூட்டணியில் தான் பிரச்னை உள்ளது." என்று கூறியிருந்தார். மேலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் குறித்தும் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்தார்.
"திமுக கூட்டணியில் தான் குழப்பம் நிலவுகிறது. உங்களுடன் கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய செயலாளர் சண்முகமே, திமுக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை தேர்தலில் வெற்றி பெறுவது சந்தேகம் தான் என கூறியுள்ளார். எங்கள் கூட்டணி வலுவாக உள்ளது." என்றும் பழனிசாமி கூறியிருந்தார்.
இந்த விவகாரம் அரசியல் களத்தில் விவாதத்தை எழுப்பியுள்ளது. இதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் அளித்துள்ள பதில் பேட்டியில், "இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கரைந்தாலோ, காணாமல் போனாலோ அதைப்பற்றி நீங்கள் ஏன் கவலைப்பட வேண்டும். அதுகுறித்து நீங்கள் ஏன் பேச வேண்டும்.
தங்கள் கூட்டணிக்கு எந்த அரசியல் கட்சியும் வருவதில்லை என்ற விரக்தியிலும், கோபத்தின் வெளிப்பாட்டிலும் எடப்பாடி பழனிசாமி இப்படி பேசியுள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராக இருக்கும் நானோ அல்லது வேறு யாராக இருந்தாலும் எந்த அரசியல் கட்சிக்கும் அடிமையாக இருந்ததில்லை. அப்படி இருக்க வேண்டிய அவசியமும் இல்லை.
மக்கள் பிரச்னை குறித்து நாங்கள் கவலைப்படவில்லை என கூறுகிறார். எது மக்கள் பிரச்னை. ஒன்றிய அரசு தமிழகத்துக்கு நிதி கொடுக்காமல் வஞ்சிப்பது மக்கள் பிரச்னை இல்லையா. தேசிய கல்வி கொள்கை மூலம் இந்தியை திணிக்க முயன்று, அதை ஏற்க மறுக்காததால் நிதி கொடுக்க மறுப்பது மக்கள் பிரச்னை இல்லையா என்பதை எடப்பாடி யோசிக்க வேண்டும்.
வக்பு வாரிய திருத்த சட்டத்தின் தன் நிலைப்பாடு என்ன என்பதை அவர் விளக்க வேண்டும். மக்கள் பிரச்னைக்காக நாங்கள் எப்போதும் போராடிக் கொண்டு தான் இருக்கிறோம். எடப்பாடி பழனிசாமி தன்னை எம்ஜிஆர், ஜெயலலிதா போன்ற ஆளுமையாக கருதுகிறார். எடப்பாடியால் ஒரு போதும் எம்ஜிஆர், ஜெயலலிதா மாதிரி ஆக முடியாது." என்றார்.












Click it and Unblock the Notifications