அண்ணாமலையின் அரசியல் அருவருக்கத்தக்கது! அநாகரிகப் பேச்சு! இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்!
சென்னை: பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை அடிப்படை ஆதாரமற்ற புகார்களை பொதுவெளியில் பேசிவருவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன் விமர்சித்துள்ளார்.
மேலும், அண்ணாமலையின் அரசியல் அருவருக்கத்தக்கது இதற்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கண்டனம் தெரிவிப்பதாகவும் கூறியிருக்கிறார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

முதல்வர் பயணம்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் உயர் அதிகாரிகளுடன் அரசு முறைப் பயணமாக துபாய் சென்றுள்ளார். துபாயில் நடைபெறும் எக்ஸ்போ 2022 கண்காட்சியில் தமிழக அரசின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள பல்துறை அரங்குகளை திறந்து வைக்கவும், ஐக்கிய அமீரக அரபு நாடுகளில் உள்ள பெரும் முதலீட்டாளர்களை நேரில் சந்தித்து, தமிழகத்திற்கு வந்து, தொழில்களில் முதலீடு செய்ய அழைக்கவும் முதல்வர் நான்கு நாள் பயணம் மேற்கொண்டுள்ளார்.

ஒளிவு மறைவில்லை
முதல்வரின் பயணம் எந்தவித ஒளிவு மறைவும் இல்லாத வெளிப்படையானது. தமிழக அரசால் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்த உண்மைகளை எல்லாம் மறைத்து விட்டு பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை ''ரூ.5000 கோடி மர்மப் பயணம்" "முதல்வர் துபாய் பயண மர்மம்" என்றெல்லாம் அடிப்படையில்லாத, ஆதாரமற்ற புகார்களை பொதுவெளியில் பேசி வருவது அருவருப்பு தரும் அநாகரிக அரசியலாகும்.

இழி செயல்
இதுபோன்ற மலிவான செயலில் ஈடுபடுவதை பாஜக தலைவர் நிறுத்திக் கொள்ள வேண்டும். முதல்வரின் அரசு முறைப் பயணத்தை கொச்சைப்படுத்தும் அண்ணாமலையின் இழி செயலை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கண்டிக்கிறது. இவ்வாறு முத்தரசன் தனது அறிக்கையில் சாடியுள்ளார்.

கடும் விமர்சனம்
சமீபநாட்களாக திமுக அரசு குறித்தும் முதல்வர் ஸ்டாலினின் துபாய் பயணம் பற்றியும் பாஜக தலைவர் அண்ணாமலை அதிகம் விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது. இதனிடையே அண்ணாமலை திமுக எம்.பி.ஆர்.எஸ்.பாரதி நோட்டீஸ் அனுப்பி கெடு விதித்ததும், இதேபோல் அமைச்சர் செந்தில்பாலாஜி ஆதாரத்தை கேட்டு கெடு விதித்ததும் கவனிக்கத்தக்கது.












Click it and Unblock the Notifications