தீபாவளி நாளில் வெடித்து சிதறிய பட்டாசுகள்.. தூய்மை பணியாளர்களுடன் களமிறங்கிய திராவிடர் விடுதலை கழகம்
சென்னை: தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் நேற்று உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். தீபாவளி பட்டாசுக் குப்பைகளை அகற்ற தூய்மைப் பணியாளர்களுக்கு ஆதரவாக திராவிடர் விடுதலைக் கழகத்தினரும் களமிறங்கி பட்டாசுகளை அகற்றினர்.
தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் நேற்று உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பட்டாசு வெடிக்க நேரக்கட்டுப்பாடுகளை உச்சநீதிமன்றம் அறிவித்திருந்தது. அதன்படி காலையில் 2 மணி நேரமும் மாலையில் 2 மணி நேரமும் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

நகரங்களிலும் கிராமங்களிலும் பட்டாசுகளை வெடித்து கோலாகலமாகக் கொண்டாடினர். சென்னையில் படிப்பிற்காகவும் வேலைக்காகவும் குடியேறிய லட்சக்கணக்கானவர்கள் சொந்த ஊருக்கு தீபாவளி கொண்டாட சென்ற நிலையில் நகரத்தின் முக்கிய சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.
சென்னையில் சொந்த வீடு வைத்திருப்பவர்கள், பண்டிகை கால நெருக்கடியில் பயணிக்க விரும்பாதவர்கள் தீபாவளி பண்டிகையை சென்னையிலேயே கொண்டாடினர். இரண்டு நாட்களுக்கு முன்பிருந்தே பட்டாசு வெடிச்சத்தம் கேட்க ஆரம்பித்து விட்டது. சென்னையில் கடும் கட்டுப்பாடுகளுடன் பட்டாசுகள் வெடித்தாலும் பல பகுதிகளிலும் மலை போல பட்டாசு கழிவுகள் குவிந்திருந்தன.
சென்னையில் பட்டாசு கழிவுகளை அகற்றுவதற்கு மாநகராட்சி சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சென்னையில் பட்டாசு கழிவுகளை அகற்றுவதற்காக, சுமார் 20 ஆயிரம் தூய்மை பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். விடிய விடிய பட்டாசு கழிவுகளை அகற்றும் பணிகளில் தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டனர்.

சென்னை மாநகராட்சியில் நாள்தோறும், சராசரியாக 5 ஆயிரம் டன் கழிவுகள் சேகரிப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களிலும் பட்டாசு கழிவுகளை சேகரிக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பட்டாசு கழிவுகளை கொண்டு செல்வதற்கு ஏதுவாக, மண்டலத்துக்கு 2 வாகனங்கள் என 30 வாகனங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
பட்டாசு கழிவுகளை சேகரிப்பதற்காக, 19,600 தூய்மை பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். சேகரிக்கப்படும் குப்பைகள் அனைத்தும், கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டை வளாகத்தில் அமைந்துள்ள கழிவு மையத்திற்கு பாதுகாப்பாக கொண்டு செல்லப்படுகின்றது.
பட்டாசு கழிவுகளை தனியாக சேகரித்து வழங்க பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. கடந்தாண்டு தீபாவளியன்று 63.76 டன் பட்டாசு கழிவுகளும், அதற்கு அடுத்த நாள் 39.4 டன் பட்டாசு கழிவுகளும் சேகரித்து அப்புறப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் பட்டாசு கழிவுகளை அகற்றும் பணியில் தூய்மை பணியாளர்களுடன் திராவிடர் விடுதலை கழகத்தினர் ஈடுபட்டனர். திராவிடர் விடுதலை கழகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், வருடாவருடம் தீபாவளிக்கு முதல்வர் ஏன் வாழ்த்து சொல்வதில்லை என்று கேட்பவர்கள், தீபாவளி முடிந்த பிறகு அதனால் ஏற்படும் பட்டாசு குப்பைகளை அள்ளும் தூய்மை பணியாளர்கள் பற்றி ஒரு துளி கூட சிந்திப்பதில்லை.
ஆனால் சிந்தித்தது கழகம், மறு நொடியே களத்தில் இறங்கியது. இராயப்பேட்டை வி.எம்.தெருவில் இருந்த பட்டாசு குப்பைகளை 15க்கும் மேற்பட்ட கழகத் தோழர்கள் சுமார் நான்கு மணிநேரம் தூய்மை பணியில் ஈடுபட்டு வி.எம்.தெருவை தூய்மைப்படுத்தினர். பொதுமக்கள் தோழர்களின் மனிதநேயப் பணியை பாராட்டி மகிழ்ந்ததோடு, அனைவருக்கும் தேனீர் வழங்கி ஊக்கப்படுத்தினர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications