தண்டவாளத்தில் விரிசல்..1 கி.மீ தூரம் நடந்தே சென்று ரயிலை நிறுத்திய இளம்பெண் மஞ்சு.. பயணிகள் பாராட்டு
கடலூர்: ரயில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டதை பார்த்து ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்தே சென்று தகவல் கொடுத்த மஞ்சு என்ற பெண்ணுக்கு பயணிகளும் ரயில்வே அதிகாரிகளும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் மக்களின் பயண தேவையை பூர்த்தி செய்வதில் ரயில்வேக்கு முக்கிய பங்கு உள்ளது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் ரயில்களில் பயணித்து வருகின்றனர்.
சென்னை உள்ளிட்ட நகரங்களில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு செல்வதற்கும் தொலை தூர பயணங்களும் மக்கள் பெரிதும் ரயில் பயணத்தை சார்ந்து இருக்கின்றனர். இதற்காக எக்ஸ்பிரஸ் ரயில், பேசஞ்சர் ரயில்கள் போன்றவை இயக்கப்பட்டு வருகின்றன.
சென்னை டூ தென்காசி! முதலமைச்சராகிய பிறகு முதல்முறையாக ஸ்டாலின் ரயில் பயணம்! குற்றாலத்தில் ஓய்வு!
பேசஞ்சர் ரயில்
அந்த வகையில், கடலூர் - விழுப்புரம் வழித்தடத்தில் தினமும் அலுவல், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்வதற்கு பயணிகள் ரயில் சேவையை பெரிதும் நம்பியுள்ளனர். காலை மாலை நேரங்களில் இந்த வழியாக இயக்கப்படும் ரயில்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும். அந்த வகையில், நேற்று காலை விழுப்புரத்தில் இருந்து மயிலாடுதுறைக்கு பேசஞ்சர் ரயில் புறப்பட்டு சென்றது. இந்த ரயில் காலை 6.30 மணி அளவில் விழுப்புரம் அருகே உள்ள சேர்ந்தனூருக்கும் திருத்துறையூருகும் இடையே சென்று கொண்டிருந்தது.
மஞ்சு என்ற இளம்பெண்
அப்போது ரயிலில் லேசாக அதிர்வு ஏற்பட்டுள்ளது. இதை உணர்ந்த ரயில் என்ஜின் டிரைவர் ரயிலின் வேகத்தை குறைத்து சீரான வேகத்தில் ரயிலை இயக்கியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக திருத்துறையூர் ரயில்வே அதிகாரிகளுக்கும் ரயில் ஓட்டுநர் தகவல் கொடுத்து இருக்கிறார். இதற்கு மத்தியில் பண்ருட்டி அருகே உள்ள அக்கடவல்லி என்ற பகுதியை சேர்ந்த மஞ்சு (வயது 22) என்ற இளம்பெண் தண்டவாளத்தில் விரிசல் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.
தண்டவாளத்தில் விரிசல்
இதனால், பெரும் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது என்பதை உணர்ந்த மஞ்சு சற்றும் தாமதிக்காமல் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்தே சென்று சேந்தனூர் ரயில் நிலையம் சென்று போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். தகவல் கிடைத்ததும் விரைந்து வந்த ரயில்வே அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டு இருப்பதை பார்த்து, அதை சீர் செய்யும் பணியை தொடங்கினர்.
நடுவழியில் நிறுத்தப்பட்ட ரயில்
இதற்கு இடையில், அந்த வழியாக சென்னைக்கு செல்லும் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டிருந்தது. உடனே திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் என்ஜின் ஓட்டுநருக்கு தகவல் கொடுத்து ரயிலை நிறுத்த போலீசார் அறிவுறுத்தினர். இதையடுத்து செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் பண்ருட்டி அருகே நடுவழியில் நிறுத்தப்பட்டது. தண்டவாளத்தில் உள்ள விரிசலை சரி செய்யும் பணி சுமார் ஒன்றரை மணி நேரம் நீடித்தது.
வெல்டிங்க் வைக்கப்பட்டு
தற்காலிகமாக கிளாம்ப் மூலம் வெல்டிங் வைக்கப்பட்டு தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசலை ஊழியர்கள் சீர் செய்தனர். இதையடுத்து, அந்த வழியாக செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் செல்வதற்கு அனுமதிக்கப்பட்டது. இதனால், திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் சுமார் ஒன்றரை மணி நேரம் தாமதம் ஆனது. நடுவழியில் ரயில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் கடும் சிரமம் அடைந்தனர். பல்வேறு பணிகளுக்காக சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு வந்து கொண்டிருந்த பயணிகள் உரிய நேரத்தில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால் தவிப்பதையும் காண முடிந்தது.
பயணிகள் பாராட்டு
இதுஒருபுறம் இருந்தாலும் தண்டவாளத்தில் விரிசல் இருந்ததை பார்த்ததும் கொஞ்சம் கூட யோசிக்காமல் ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்தே சென்று ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்த மஞ்சு என்ற பெண்ணை ரயில் பயணிகளும் ரயில்வே அதிகாரிகளும் பாராட்டினர். உரிய நேரத்தில் மஞ்சு அளித்த தகவலால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டதாகவும் பயணிகள் பாராட்டி பேசுவதை கேட்க முடிந்தது.