"பரம காது.. சேதுராமன் கிட்ட ரகசியமா".. கவுண்டருடனும் கலக்கிய கிரேஸி!
சென்னை: சின்ன வாத்தியார்.. கிரேஸி ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல், கவுண்டமணி ரசிகர்களுக்கும் மறக்க முடியாத ஒரு படம். அத்தனை பிரமாதமாக பிரித்து மேய்ந்திருப்பார்கள் கிரேஸியும், கவுண்டரும்.
சின்னவாத்தியார் படம் பிரபு - குஷ்பு பெரும் இடைவெளிக்குப் பிறகு இணைந்து நடித்த படம். இது ஒரு வயிறு வலிக்க சிரிக்க வைக்கும் குபீர் சிரிப்புப் படம். வசனம் கிரேஸி மோகன்தான்.
படத்தில் நடித்த அத்தனை பேரும் பிரமாதமாக கலக்கியிருப்பார்கள் காமெடியில். அதிலும் கவுண்டமணியின் டைமிங்கும், அவரது வசன டெலிவரியும் தனித்து தூக்கலாக நிற்கும். படத்தையே தூக்கி நிறுத்தியிருப்பார் கவுண்டர்.
கவுண்டமணி சும்மாவே கலக்குவார் டைமிங்கில். இதில் கிரேஸி மோகன் வசனமும் இணைந்து இருவரும் ரணகளப்படுத்தியிருப்பார்கள். கிரேஸி படத்தில் வசனங்கள் தனித்து அவரை சுட்டிக் காட்டியபடியே டிராவல் பண்ணும். ஆனால் இப்படத்தில் கவுண்டமணியின் தனித்துவமும் இணைந்து இரட்டை விருந்தாக அமைந்திருக்கும்.
"பரம காது.. இல்லை பரம சாது"
"சேதுராமன் கிட்ட ரகசியமா"
"சர்டா நாயே.. சரி சர்டா பேயே"
"எம்ஏ பிலாசபி பிலாசபி"
"கே சேது இல்லை.. இனிமே கே காது"
"இடையில ஒன்னு ரெண்டு வார்த்தையை கண்டுபிடிக்கிறான்.. அது காதால அல்ல.. மூக்கால உறிஞ்சுறான்"
படம் முழுக்க சிலாகிக்க வைக்கும் வசனம்.. அதை கவுண்டமணி பேசிய லாவகம்.. என அதிரிபுதிரியான மறக்க முடியாத காமெடிப் படம் சின்னவாத்தியார். ஒருமுறை பேட்டியின்போது கிரேஸி மோகன் இதுகுறித்து கூறுகையில், "கவுண்டமணி ஒரு அற்புதமான கலைஞர். டைமிங் சென்ஸும், காமெடி சென்ஸும் அலாதியானது. அதற்குப் போட்டியாக நான் இந்தப் படத்தில் வசனம் எழுத வேண்டியிருந்தது. சும்மா சொல்லக் கூடாது நான் நினைத்ததை விட பிரமாதமாக பேசியிருந்தார் கவுண்டர்" என்று பாராட்டியிருப்பார்.
கிரேஸி மோகன் படைத்த எண்ணற்ற காமெடி விருந்தில்.. சின்ன வாத்தியாருக்கும் தனி இடமுண்டு.