“நீலிக்கண்ணீர் வடித்த பச்சைத் துரோகிகள் இப்போது எங்கே?" - எடப்பாடி மீது முதல்வர் ஸ்டாலின் அட்டாக்!
சென்னை: "டெல்டா விவசாயிகளின் கண்ணீர் துடைக்கத் துணை நிற்காமல், நீலிக்கண்ணீர் வடித்த பச்சைத் துரோகிகள் எங்கே? போராடும் எங்களுக்குத் துணைநிற்க யாரிடம் அனுமதி பெற வேண்டும் என எடப்பாடி பழனிசாமி காத்திருக்கிறார்?" என தமிழக முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
நெல் கொள்முதல் ஈரப்பத அளவை மத்திய அரசு அதிகரிக்காததை கண்டித்து திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் திருவாரூரில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்று, தஞ்சையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விவசாயிகளின் நலன் கருதி நெல் கொள்முதலுக்கான ஈரப்பதத்தை 17 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக உயர்த்த வேண்டும் என பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். ஆனால் தமிழக அரசின் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்தது. மத்திய அரசின் நிராகரிப்பைக் கண்டித்து திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் நேற்று தஞ்சாவூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தின.
இந்நிலையில், திருவாரூர் ரயில் நிலையம் முன்பாக இன்று நடைபெற்று வரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் திமுக கூட்டணி கட்சியைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டுள்ளனர். நெல் ஈரப்பத அளவை அதிகரிக்காமல், நிவாரணமும் அளிக்காமல் டெல்டா விவசாயிகளை வஞ்சிக்கும் மத்திய பாஜக அரசைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இந்நிலையில், தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தமது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ""டெல்டா விவசாயிகளின் கண்ணீர் துடைக்கத் துணை நிற்காமல், நீலிக்கண்ணீர் வடித்த பச்சைத் துரோகிகள் எங்கே? நீர்நிலைகள் நிறைந்து, உழவர்கள் கடும் உழைப்பைச் செலுத்தி நெடுவயல் நிறையக் கண்டபோது, கொள்முதல் நிலையங்களை அதிகரித்து நாம் காத்திருந்தோம். ஆனால், அதிகப்படியான மழைப்பொழிவால், நெல்மணிகள் ஈரமாயின.
உடனே, "சாகுபடிக் காலத்திற்கு முன்னதாகவே ஏன் அறுவடை செய்யவில்லை?" என்றெல்லாம் அதிமேதாவித்தன அரசியல் செய்தார், பச்சைத்துண்டு போட்டு பச்சைத் துரோகம் செய்தவரான எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி.
நெல்லின் ஈரப்பதத்தை 22 விழுக்காடாக உயர்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து பிரதமர் நரேந்திர மோடிக்கு நான் கடிதம் எழுதினேன். அந்தக் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்துள்ளது. இதோ, கழனியில் பாடுபட்ட உழவர்கள் களத்தில் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
போராடும் எங்களுக்குத் துணைநிற்க யாரிடம் அனுமதி பெற வேண்டும் என பழனிசாமி அவர்கள் காத்திருக்கிறார்? கூட்டணி அமைத்தால், அதனால் தமிழ்நாட்டுக்கு நன்மைகளைப் பெற்றுத்தர வேண்டும். சுயமரியாதையையும் உரிமைகளையும் அடகு வைக்க மட்டும்தான் கூட்டணி என்று எடப்பாடி பழனிசாமி நினைக்கிறாரா?
மூன்று வேளாண் சட்டங்களை மண்டி போட்டு ஆதரித்த எடப்பாடி பழனிசாமி அவர்கள், ஒருமுறையாவது தலையைச் சற்று நிமிர்த்தி நமது உழவர்களின் கோரிக்கைகளைக் கேட்கச் சொல்லியாவது சொல்வாரா? உழவர்கள் நலன் காக்கத் தமிழ்நாடு ஒற்றுமையாகக் குரல் கொடுக்க வேண்டும் என்பதால்தான் இத்தனையும் கேட்கிறேன். இரத்தத்தை வியர்வையாகச் சிந்தி உழவர்கள் உழைத்த உழைப்பு வீணாகக் கூடாது!" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications