தமிழக பாஜக பொறுப்பாளராக சிடி ரவி நியமனம்.. கர்நாடக 'அதிரடிக்காரரை' களமிறக்கி பாஜக வியூகம்
சென்னை: தமிழக பாஜக பொறுப்பாளராக சிடி ரவி நியமனம் செய்யப்பட்டுள்ளார். கேரள பாஜக பொறுப்பாளராக தமிழகத்தைச் சேர்ந்த சிபி ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்புகள் இன்று இரவு வெளியானது.
தமிழகம் மற்றும் கேரளா ஆகிய இரு மாநிலங்களிலும், அடுத்த ஆண்டு சட்டசபை பொதுத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த நியமனம் முக்கியத்துவம் பெறுகிறது.
சி.டி.ரவி கர்நாடகாவில் மாநில அமைச்சராக பதவி வகித்த அனுபவம் உள்ளவர். மூன்று முறை அங்கு அமைச்சராக அவர் பதவி வகித்துள்ளார்.

கர்நாடக எம்எல்ஏ
கர்நாடகாவின் மலைநாடு பகுதியான சிக்கமகளூர் தொகுதி எம்எல்ஏவான இவர், ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட சங்பரிவார் அமைப்புகளுடன் நெருங்கிய தொடர்பு உள்ளவர். இந்து அமைப்புகளையும் இந்துக்களையும் ஒருங்கிணைப்பதில் கர்நாடக மாநிலத்தில் பெயர் பெற்றவர்.

கோஷ்டி கிடையாது
எடியூரப்பா அல்லது அவருக்கு எதிரான கோஷ்டி என யாருடனும் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளாமல், நேரடியாக பாஜக மேலிடத் தலைவர்களுடன் நெருக்கமுள்ளவர் சிடி ரவி. வாக்காளர்களை கட்டிப் போடும் அளவுக்கு (கன்னடத்தில்) பேசும் திறமை கொண்டவர் என்பது இவர் குறித்த பார்வை.

குஷ்புவை வரவேற்றவர்
தொடர்ந்து சில மாதங்களாகவே தமிழக அரசியலுடன் சிடி ரவி பின்னிப்பிணைந்து உள்ளார். சமீபத்தில் நடிகை குஷ்பு காங்கிரஸ் கட்சியில் இருந்து பாஜகவில் இணைந்த போது டெல்லியில் அவரை கட்சியில் சேர்க்கும், வரவேற்பு நிகழ்ச்சியில் பூங்கொத்து கொடுத்தது சிடி ரவிதான்.

வேல் யாத்திரை
இதன் பிறகும், வேல் யாத்திரை உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் அவர் ட்வீட் வாயிலாக கருத்து கூறியிருக்கிறார். பாஜக தேசிய பொதுச் செயலாளராக அவரை சமீபத்தில் நியமித்தது தலைமை. இதையடுத்து அமைச்சர் பதவியை துறந்துவிட்டு கட்சி பணிகளில் முழுமையாக ஈடுபட்டு வருகிறார்.

அதிரடி காட்டுகிறதா பாஜக
தமிழக தேர்தலை கருத்தில் கொண்டுதான் இவரை கர்நாடக அமைச்சரவையில் இருந்து விடுவிக்கும் வியூகத்தை பாஜக மேலிடம் கையில் எடுத்ததாக கூறப்படுகிறது. அப்படி பாஜக தலைமை பெரிதாக நம்பக்கூடிய இந்த சிடி ரவி, தமிழகத்தின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது மிகுந்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இனிமேல் தமிழக பாஜக வியூகம் எப்படி இருக்கும்? இன்னும் அதிரடி காட்ட போகிறதா? என்றெல்லாம் கேள்விகள் எழுகின்றன. அதேநேரம், தமிழக பாஜகவின் மூத்த தலைவரான சிபி ராதாகிருஷ்ணன் கேரளாவில் பாஜக பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

பீகார் வியூகம்
பாஜக தேசிய தலைவர் நட்டா வெளியிட்ட அறிவிப்பில் பூபேந்திர யாதவ் தொடர்ந்து பீகார் மற்றும் குஜராத் பொறுப்பாளராக நீடிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பூபேந்திர யாதவின் கீழ்தான், பீகார் சட்டமன்றத் தேர்தலில் பாஜக அற்புதமாக செயல்பட்டது. பாஜக 74 இடங்களை வென்று தேசிய ஜனநாயக கூட்டணியின் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. குஜராத்தில் 8 சட்டமன்ற இடங்களுக்கான இடைத்தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றது.

மேற்கு வங்கம்
கைலாஷ் விஜயவர்ஜியா மேற்கு வங்க பாஜக பொறுப்பாளராக தொடருவார். மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு கணிசமான வெற்றியைத் தந்தார் கைலாஷ் விஜயவர்ஜியா. 2019 மக்களவை தேர்தலில் மேற்கு வங்கத்தில் பாஜக யாருமே எதிர்பார்க்காத விதத்தில், 18 இடங்களை வென்றது. மேற்கு வங்கத்தில் சட்டமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறும். இதை மனதில் வைத்து, கட்சி மீண்டும் இந்த பொறுப்பை அவரிடம் ஒப்படைத்துள்ளது.












Click it and Unblock the Notifications