விமானநிலையமா? விலங்குப் பண்ணையா? கடத்தல் களமாகும் சென்னை ஏர்போர்ட்
சென்னை விமான நிலையத்திற்கு வந்து இறங்கிய ஒரு இந்தியப் பயணியிடம் இருந்து பயணியிடம் இருந்து சுங்கத்துறை அதிகாரிகள் பச்சைப் பாம்பு, சிகப்பு நிற ஆமை எனக் கிட்டத்தட்ட விதவிதமான22 வெளிநாட்டு அரியவகை விலங்குகளைப் பறிமுதல் செய்துள்ளனர்.
சென்னை விமானநிலையத்தில் கடத்தல் சம்பவங்கள் சில காலமாக அதிகரித்துள்ளதோ என்று சந்தேகப்படும் அளவுக்குப் பல சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்து வருகின்றன. சமீபத்தில் சென்னை விமானநிலையத்தில் மூலம் மட்டுமே கிட்டத்தட்ட 200 கிலோ தங்கம் கடத்தப்பட்டுள்ளதாக ஒரு அதிர்ச்சி செய்தி வெளியாகப் பலரையும் ஆச்சரியப்பட வைத்தது.

இந்தத் தங்கக் கடத்தலில் பாஜகவைச் சேர்ந்த நபருக்கு தொடர்பு உள்ளதாகவும் தகவல்கள் பரவின. எதிர்க்கட்சிகள் கூட அந்த விவகாரத்தில் பாஜகவைச் சேர்ந்த நபருக்கு தொடர்புகள் உள்ளன என்றே குற்றச்சாட்டை முன்வைத்திருந்தனர்.
ஒரு பக்கம் தங்கக் கடத்தல் விவகாரம் சென்னை விமானநிலைய அதிகாரிகளுக்கு மிகப் பெரிய குடைச்சலைக் கொடுத்துக் கொண்டிருக்கும் போது மற்றொரு பக்கம் அரிய வகை விலங்குகளை விமானத்தில் கடத்தி வரப்படுவது தொடர் கதையாகி இருக்கிறது.
கடந்த ஆண்டு ஜனவரி மாதம் மருத்துவ குணம் கொண்ட அரியவகை ஆமைகள் கடத்தி வந்தபோது அதை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதேபோல கடந்த 2022 மே மாதம் அரியவகை வெள்ளை நிற முள்ளம்பன்றி, டாமரின் குரங்கு குட்டி ஆகியவற்றை ஒரு இளைஞரிடம் இருந்து பறிமுதல் செய்தனர். இப்படித்தான் கடந்த 9 மாதங்கள் முன்னதாக தாய்லாந்திலிருந்து அரிய வகை குட்டி பாம்புகளைக் கடத்தப்பட்டுக் கொண்டுவந்த போது சுங்கத்துறை அதிகாரிகளை அதனைப் பிடித்தனர். இப்படி தொடர்ச்சியாக தாய்லாந்திலிருந்து அரிய வகை விலங்குகள் சென்னைக்குக் கடத்தப்படுவது தொடர்கதையாகி இருக்கிறது.

இந்நிலையில் தாய்லாந்து நாட்டின் பாங்காக்கில் இருந்து சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த இந்தியப் பயணி ஒருவரிடமிருந்து 22 வெளிநாட்டு வனவிலங்குகளைச் சுங்க அதிகாரிகள் கைப்பற்றியதாக அதிகாரிகள் நேற்று தெரிவித்துள்ளனர். கடந்த 10 ஆம் தேதி பாங்காக்கில் இருந்து தாய் ஏர் ஏசியா விமானத்தில் சென்னை வந்த முகமது மீரா சர்தார் அலி என்ற பயணியிடம் இருந்து சுங்கத் துறையின் வான் நுண்ணறிவு பிரிவு இந்த அரியவகை விலங்குகளைக் கைப்பற்றியதாகச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட விலங்குகளில் ஒரு சியாமாங் கிப்பன், இரண்டு சுண்டா பறக்கும் லெமூர், ஐந்து இந்தோ-சென் பெட்டி ஆமை, நான்கு கண்கள் கொண்ட ஒன்பது ஆமைகள், ஒரு கீல்டு பாக்ஸ் ஆமை, ஒரு சிவப்பு கால் ஆமை, இரண்டு பச்சை மரப்பாம்பு, ஒரு வெள்ளை உதடு மலைப்பாம்பு என விதவிதமான அரியவகை விலங்குகளை அவர் கடத்தி வந்துள்ளார். வனவிலங்குகள் (பாதுகாப்பு) சட்டம், 1972இன் அட்டவணை IVபடி இந்த அரிய வகை விலங்கினங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. ஆகவே அவற்றைக் கொண்டுவருவது சட்டவிரோதம். அதற்கு முறையான ஆவணங்கள் தேவை.
சுங்கச் சட்டம், வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டத்தின் விதிகளின் கீழ் சர்தார் அலியைக் கைது செய்த அதிகாரிகள் அவரை நீதிமன்றக் காவலில் வைத்துள்ளனர். "உயிரோடு இருக்கும் அனைத்து வெளிநாட்டு வனவிலங்குகளும் பாதுகாப்பாக ஏர்லைன்ஸ் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டு, அவற்றின் பிறப்பிடமான சொந்த நாட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளன. மேலும் விசாரணை நடந்து வருகிறது" என்கிறார் ஒரு சுங்கத்துறை அதிகாரி.
கடந்த ஆண்டு நவம்பர் 6ஆம் தேதி 36 வெளிநாட்டு விலங்குகளை பாங்காக்கில் இருந்து கடத்தி வந்ததற்காக 44 வயது நபரை சுங்கத்துறை அதிகாரிகள் சென்னை விமான நிலையத்தில் கைது செய்திருந்தனர். இதேபோல், கடந்த ஆண்டு செப்டம்பரில் பாங்காக்கில் இருந்து பறந்த மற்றொரு பயணியிடம் இருந்து 16 வெளிநாட்டு விலங்குகள் கைப்பற்றப்பட்டன.
இப்படித் தொடர்ந்து வெளிநாடுகளிலிருந்து அரியவகை விலங்குகளைக் கடத்தப்படு கொண்டுவரப்படும் களமாகச் சென்னை விமான நிலையம் மாறி வருவதாக அங்குள்ள சில அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். அரசு இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குற்றவாளிகள் கடுமையாகத் தண்டிக்கப்பட்ட வேண்டும் என்றும் வனவிலங்கு ஆர்வலர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications