22 பேர் கையெழுத்து.. சீட் கொடுக்கலைனா கட்சி காலினு எடப்பாடியை மிரட்டினார் - புகழேந்தி பரபர!
சென்னை : 22 எம்.எல்.ஏ.க்களிடம் கையெழுத்து வாங்கிக்கொண்டு எடப்பாடி பழனிசாமியிடம் சென்று, ராஜ்யசபா சீட் கொடுக்கவில்லை என்றால் கட்சியும், நீங்களும் காலி என மிரட்டித்தான் சீட் வாங்கினார் சி.வி.சண்முகம் எனக் குற்றம்சாட்டியுள்ளார் புகழேந்தி.
தன்னை சி.வி.சண்முகம் மிரட்டியதை எடப்பாடி பழனிசாமியே சொல்லியுள்ளார் என்றும் ஓபிஎஸ் ஆதரவாளரான புகழேந்தி கூறியுள்ளார்.
பொன்னையன் போனில் பேசிய ஆடியோ வெளியான விவகாரம் குறித்தும் பேசியுள்ள புகழேந்தி மேலும் பல ஆடியோக்கள் வெளிவரும் எனத் தெரிவித்துள்ளார்.

ஓபிஎஸ் வீட்டில் ஆலோசனை
அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வத்தை ஓரங்கட்டி இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி வந்துள்ள நிலையில், ஈபிஎஸ் ஆதரவாளரான பொன்னையன் பேசிய ஆடியோ வெளியாகி பரபரப்பைக் கிளப்பியது. இதனால், ஓபிஎஸ் தரப்பு குஷியாகியுள்ளது. இந்நிலையில், இன்று சென்னை பசுமைவழி சாலையில் உள்ள ஓ.பி.எஸ் வீட்டில் அவருடன் ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி ஆலோசனை நடத்தினார்.

பொன்னையன் உயிருக்கு ஆபத்து
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய புகழேந்தி, "அதிமுகவில் மிக மூத்தவர் பொன்னையன். பல உண்மைகளை வெளியில் பேசியிருக்கிறார். தனக்கு வரக்கூடிய மிரட்டல்களால் மாற்றிப் பேச வேண்டிய கட்டாயத்தில் பொன்னையன் இருக்கிறார். அவரது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. சொந்த சாதிக்காரர்களாலேயே அவருக்கு ஆபத்து உள்ளது. பொன்னையன் மேல் எடப்பாடி பழனிசாமி தபரப்பினர் கோபமாக இருக்கின்றனர். போலீசார் உடனடியாக பொன்னையன் வீட்டுக்கு உரிய பாதுகாப்பை தர வேண்டும்.

கோகுல இந்திரா அல்வா
எம்.பி சீட்டுக்காக அலைந்தவர் கோகுல இந்திரா. எம்.பி சீட்டுக்காக கேக் ஊட்டியவர் கோகுல இந்திரா. கேக் ஊட்டி எம்.பி சீட்டை வாங்கிக்கொண்டு அல்வா கொடுக்க நினைத்தார். நாங்கள் அல்வா கொடுத்துவிட்டோம். ஜெயலலிதாவால் தூரமாக தூக்கி எறியப்பட்ட பச்சைத் துரோகி தான் கே.பி.முனுசாமி. அவரைப் பற்றி, அவரது குவாரி பற்றியெல்லாம் பொன்னையன் விரிவாகப் பேசிவிட்டார்.

மிரட்டினார் சி.வி.சண்முகம்
22 எம்.எல்.ஏ.க்களிடம் கையெழுத்து வாங்கிக்கொண்டு எடப்பாடி பழனிசாமியிடம் சென்று, ஒழுங்கு மரியாதையா ராஜ்யசபா சீட் கொடுக்கவில்லை என்றால் கட்சியும், நீங்களும் காலி என மிரட்டித்தான் ராஜ்யசபா எம்.பி சீட்டை வாங்கினார் சி.வி.சண்முகம். இதை எடப்பாடி பழனிசாமியே சொல்லி இருக்கிறார். 22 எம்.எல்.ஏக்களை வைத்து கட்சியை உடைக்கப் பார்க்கிறார். அவருக்குத்தான் சீட்டை கொடுக்க வேண்டும் என ஈபிஎஸ் சொல்லி இருக்கிறார்.

முனுசாமி காணாமல் போயிருப்பார்
சாதி வெறிதான் தற்போது அதிமுகவை ஆட்டிப்படைக்கிறது. எவ்வளவு கேவலமான அரசியல் நடக்கிறது. கே.பி.முனுசாமி ஒரு பச்சோந்தி. ஓ.பி.எஸ்ஸின் காலைப் பிடித்து வளர்ந்தவர் முனுசாமி. தர்மயுத்தம் இல்லையென்றால் கே.பி.முனுசாமி காணாமல் போயிருப்பார். அதிமுக அலுவலகம் எங்கள் வீடு. அங்கு திருடவேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை" என்று தெரிவித்தார்.

இது பொதுக்குழுவா?
ஓ.பன்னீர்செல்வம் என்ன துரோகம் செய்துவிட்டார் என்று விளக்க வேண்டும். மாற்றி மாற்றி வசைபாடுவதற்கு ஒரு பொதுக்குழுவா? உங்களுக்கு மானரோஷம் இல்லை. தங்கமணி, வேலுமணி, சி.வி.சண்முகம், கே.பி.முனுசாமி, தளவாய் சுந்தரம் ஆகிய சிலர் பற்றியே பொன்னையன் பேசியுள்ளார். ஜெயலலிதா இருந்த பொதுச்செயலாளர் பதவியில் வேறு யாரும் அமரக்கூடாது என்று தான் கட்சி விதிகளில் திருத்தம் கொண்டுவரப்பட்டது. ஆனால் இன்று எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராகி உள்ளார்.

இது நியாயமா?
ஓ.பன்னீர்செல்வம் அதிமுக அலுவலகம் சென்ற போது அவருடன் வந்த அனைவருமே அதிமுகவினர் தான். ஏற்கனவே கட்சி அலுவலகத்தில் ரவுடிகளை குவித்திருந்தார் எடப்பாடி பழனிசாமி. 7 மாவட்ட செயலாளர்கள் அப்போது அதிமுக அலுவலகத்தில் இருந்தனர். கற்கள் பறந்து வந்தன. போலீஸ் இல்லாவிட்டால் அதிமுக அலுவலகத்தில் பல கொலைகள் நடந்திருக்கும். எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளர் ஆவது நாட்டுக்கு மிக அவசியமானதா?

துரோகம்
சசிகலா காலைப்பிடித்து முதல்வராகி காலை வாறி துரோகம் செய்தார். ஓபிஎஸ்ஸை வைத்தே முதல்வர் என அறிவிக்கச் செய்தீர்கள். பெருந்தன்மையோடு அறிவித்தார். நீட்டிய இடத்தில் எல்லாம் கையெழுத்து போட்டு, முதலமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் பதவிகளை விட்டுத்தந்து, சொந்தத் தம்பியை கட்சியில் இருந்து நீக்கியதைக் காட்டிலும் ஓ.பன்னீர்செல்வம் வேறு என்ன தியாகம் செய்ய வேண்டும்? விஷம் கொடுப்பதை தவிர அவருக்கு எல்லா அயோக்கியத் தனத்தையும் செய்துவீட்டீர்கள்" எனப் பேசினார்.












Click it and Unblock the Notifications