எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?
சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு எஸ்பி வேலுமணி அணியினர் வந்துள்ளனர். எடப்பாடி பழனிசாமி மற்றும் எஸ்பி வேலுமணி அணிகள் இணைய இருக்கும் சூழலில், சிவி சண்முகம் மட்டும் அங்கு வரவில்லை. இதனால் சிவி சண்முகம் தனித்துவிடப்படுகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
சட்டசபையில் தவெக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பின் போது அதிமுகவில் இருந்த 25 எம்எல்ஏ எஸ்பி வேலுமணி தலைமையில் விஜய்க்கு ஆதரவாக வாக்களித்தனர். இதன் மூலமாக அதிமுகவில் உட்கட்சி பூசல் நிலவி வருவது வெளிச்சத்திற்கு வந்தது. இதனால் எஸ்பி வேலுமணி தலைமையிலான எம்எல்ஏ-க்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பு கடிதம் அளித்தது.

தவெக மீதும் குதிரை பேரம் நடத்தியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. சுமார் 10 நாட்களுக்கும் மேலாக எஸ்பி வேலுமணி மற்றும் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு இடையில் மோதல் நிலவி வந்தது. இதனிடையே அதிமுகவைச் சேர்ந்த 4 எம்எல்ஏ-க்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் ஐக்கியமாகினர். அதேபோல் விஜய் தலைமையில் அமைச்சரவையும் முழுமையாக அமைக்கப்பட்டுவிட்டது.
இதனால் எடப்பாடி பழனிசாமியுடன் சமாதான போக்கை கடைபிடிக்க எஸ்பி வேலுமணி தரப்பு முடிவு செய்தது. அதற்காக தங்கமணி மற்றும் நத்தம் விஸ்வநாதன் மூலமாக எடப்பாடி பழனிசாமியுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் எஸ்பி வேலுமணி அணி வைத்த ஒரு சில கோரிக்கையை எடப்பாடி பழனிசாமி ஏற்றுக் கொள்வதாக கூறி இருக்கிறார்.
இதனால் இன்று எடப்பாடி பழனிசாமி மற்றும் எஸ்பி வேலுமணி அணியினர் இணைகின்றனர். இதற்காக எஸ்பி வேலுமணி, விஜயபாஸ்கர், அன்பழகன், லீமா ரோஸ் உள்ளிட்ட பலரும் எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு வந்துள்ளனர். ஆனால் மயிலம் தொகுதி எம்எல்ஏ சிவி சண்முகம் மட்டும் வரவில்லை. இதுகுறித்து விசாரித்த போது, சிவி சண்முகம் சற்று நேரத்தில் வந்துவிடுவார் என்று சொல்லப்பட்டது.
மறுபக்கம் விஜயபாஸ்கர் சபாநாயகார் ஜேசிடி பிரபாகரை சந்திக்க வந்துள்ளார். கொறடா தொடர்பாக எஸ்பி வேலுமணி அணி கொடுத்த கடிதத்தை திரும்ப பெற விஜயபாஸ்கர் வந்திருக்கிறார். இங்கும் கூட சிவி சண்முகம் வரவில்லை. இதனால் சிவி சண்முகம் தனித்துவிடப்பட்டுள்ளாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications