சைபர் குற்றவாளிகளை விரைவாக கண்டறிய புது ‘ஆப்’.. Cyber Alert செயலியை தொடங்கி வைத்தார் சென்னை கமிஷனர்!
சென்னை: சைபர் குற்றங்களை கட்டுப்படுத்தவும், குற்றவாளிகளை விரைந்து கைதுசெய்யவும், 'சைபர் அலர்ட்' எனும் புதிய செயலி இன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சைபர் குற்றங்களில் ஈடுபடும் நபர்கள் சமீபகாலமாக வேலை தேடும் இளைஞர்களை குறித்து வைத்து பணம் மோசடி செய்து வருகின்றனர். இதேபோல் ஓய்வூதியம் பெறும் முதியவர்கள், பெண்கள் என வெவ்வேறு வகைகளில் பண மோசடிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
பண மோசடி, பெண்களுக்கு எதிராக படங்கள் வீடியோக்களை பயன்படுத்தி மிரட்டல் என விதவிதமாக சைபர் கிரைம் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இதை தடுக்க, கூடுதல் டி.ஜி.பி தலைமையில் மாநில சைபர் கிரைம் குற்றத் தடுப்பு பிரிவு அலுவலகம் செயல்படுகிறது. மாநகர போலீஸ் கமிஷனர்கள் மற்றும் மாவட்ட எஸ்.பிக்கள் தலைமையிலும் சைபர் தடுப்பு பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன.

தற்போது, சைபர் கிரைம் குற்றங்களை தடுக்க, 'சைபர் அலர்ட்' எனும் புதிய செயலி உருவாக்கப்பட்டுள்ளது. சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் இன்று மாலை வேப்பேரி, காவல் ஆணையாளர் அலுவலகத்தில் 'CYBER ALERT APP' செல்போன் செயலியை துவக்கி வைத்தார்.
இந்த செயலியின் வழியாக சைபர் குற்றவாளிகளின் படங்கள், அவர்கள் பயன்படுத்திய மொபைல் எண்கள், வங்கி கணக்குகள், சமூக வலைதள கணக்குகள், இமெயில் ஐடிகள், வெப்சைட்டுகள் போன்றவை சென்னை பெருநகர காவல்துறையின் 20 காவல் பிரிவுகளால் உள்ளீடு செய்யப்படுகிறது.
மொபைல் எண்களோ அல்லது ஒன்றிற்கும் மேற்பட்ட மற்ற தரவுகளோ வழக்குகளில் தொடர்புடையதாக இருப்பின் அந்த வழக்குகள் ஒருங்கிணைந்து இந்த செயலியின் மூலம் வகைப்படுத்தப்படும். அது குறித்த தகவல்கள் தொடர்புடைய காவல் பிரிவுகளுக்கும், உயர் அதிகாரிகளுக்கும் அனுப்பப்படும்.
இதன் வாயிலாக, உயர் அதிகாரிகள் சைபர் குற்றத் தரவுகளை கண்காணித்து, புலனாய்வு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியும், மேலும் தனிப்படைகளை அமைத்து அதிக அளவில் குற்றவாளிகளை வெளி மாநிலங்கள் சென்று கைது செய்வதை மேம்படுத்தவும் இயலும்.
பெருகிவரும் சைபர் குற்றங்களை வகைப்படுத்துவதிலும், குற்றத் தரவுகளை ஒருங்கிணைப்பதிலும், அதன் மூலம் ஒன்றுக்கொன்று தொடர்புடைய குற்றங்களை எடுத்துக்காட்டுவதிலும் இந்த Cyber Alert App செயலியானது முக்கிய பங்காற்றும். இதன் வாயிலாக சைபர் குற்றவாளிகளை கைது செய்வது எளிதாகும்.
சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தில் முன்னோடி திட்டமாக செயல்படுத்தப்பட்டிருக்கும் இந்த Cyber Alert App செயலியானது, தமிழ்நாடு முழுவதும் விரிவுபடுத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications