நள்ளிரவு 1 மணி முதல் செயல்பட தொடங்கியது சென்னை விமான நிலையம்.. 13 மணி நேரம் முடக்கிப்போட்ட ஃபெஞ்சல்!
சென்னை: ஃபெஞ்சல் புயல் நேற்று இரவு கரையைக் கடந்த நிலையில், மழை இல்லாததால் சென்னை விமான நிலையம் நள்ளிரவு 1 மணி முதல் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தது. 13 மணி நேரம் சென்னையில் விமான சேவை ரத்து செய்யப்பட்ட நிலையில், விமான நிலைய ஆணைய அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 'ஃபெஞ்சல்' புயலாக வலுப்பெற்றது. ஃபெஞ்சல் புயல் நேற்று மாலை 5.30 மணியளவில் கரையைக் கடக்கத் தொடங்கியது. புயலின் முனைப்பகுதி மாலை கரையைக் கடக்கத் தொடங்கிய நிலையில் இரவு 11.30 மணியளவில் புயல் முழுமையாக கரையைக் கடந்தது.

புயல் காரணமாக சென்னை, புறநகர் பகுதிகளில் கனமழை பெய்து வந்தது. நேற்று கனமழை மற்றும் சூறைக் காற்று காரணமாக சென்னை விமான நிலையம் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. விமான ஓடுபாதையில் தண்ணீர் தேங்கியதால் நண்பகல் 12 மணி வரை இரவு 7 மணி வரை விமான நிலையம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
தொடர்ந்து மழை பெய்ததால், சென்னை விமான நிலையத்தை மழைநீர் சூழ்ந்தது. குறிப்பாக, விமான நிலைய ஓடுபாதையில் மழை வெள்ளம் சூழ்ந்ததால், விமானங்களை இயக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக, சென்னையில் நேற்று மட்டும் 55 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
ஏற்கனவே இண்டிகோ விமானங்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதேபோல சென்னையில் தரையிறங்க வேண்டிய விமானங்கள் சில வானத்தில் நீண்ட நேரம் வட்டமடித்துக் கொண்டிருந்தன. இதனையடுத்து சென்னைக்கு வந்து சேர வேண்டிய 12 விமானங்கள் ரத்து செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது.
மழை தொடர்ந்ததால் அதிகாலை 4 மணி வரை விமானங்கள் இயக்கப்படாது என்றும், அதுவரை சென்னை விமான நிலையம் மூடப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது. ஃபெஞ்சல் புயல் நள்ளிரவில் கரையைக் கடக்கும் என்பதால், அப்போது பலத்த காற்று மற்றும் மழை பெய்யும். எனவே, அதிகாலை 4 மணி வரை விமான நிலையம் மூடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், ஃபெஞ்சல் புயல் நேற்று இரவு 11.30 மணியளவில் முழுவதுமாக கரையைக் கடந்தது. புதுச்சேரி அருகே கரையைக் கடந்த ஃபெஞ்சல் புயல், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது. இதையடுத்து, சென்னையில் மழை இன்றி இயல்புக்கு வந்தது.
ஃபெஞ்சல் புயல் நேற்று இரவு கரையைக் கடந்த நிலையில், மழை இல்லாததால் சென்னை விமான நிலையம் நள்ளிரவு 1 மணி முதல் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தது. விமான நிலைய ஆணைய அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
முன்னதாக மோசமான வானிலையால் இன்று அதிகாலை 4 மணி வரை விமான போக்குவரத்து சேவைகள் நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 13 மணி நேரத்துக்குப் பிறகு விமான சேவை மீண்டும் தொடங்கப்பட்டு தற்போது இயல்புக்கு வந்துள்ளது.












Click it and Unblock the Notifications